சுருளி அருவி நீரை பம்பிங் செய்து குடிநீர் வழங்கும் திட்டம் தேவை
கம்பம்: சுருளி அருவியிலிருந்து வெளியேறும் நீரை தேக்கி, கம்பம் பகுதி கிராமங்களுக்கு மாசுபடாத குடிநீராக விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க ஊராட்சி நிர்வாகங்கள் வலியுறுத்தி உள்ளன. கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள நகரங்களுக்கு, லோயர் கேம்பில் முல்லைப் பெரியாற்றில் பம்பிங் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இது தவிர உள்ளாட்சி அமைப்புகள் முல்லைப் பெரியாற்றில் ஆங்காங்கே உறைகிணறு அமைத்தும் குடிநீர் விநியோகம் செய்கின்றனர். ஊராட்சிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் இதுவரை இல்லை. ஹைவேவிஸ், மணலாறு, வெண்ணியாறு, இரங்கலாறு அணைகளில் சேகரமாகும் தண்ணீர் மழை காலங்களில் வீணாகி ஆண்டிற்கு 500 மி.கன அடி நீர் சுருளி அருவி வழியாக வந்து முல்லைப் பெரியாற்றில் கலக்கிறது. சுருளி அருவிக்கு அருகே தடுப்பணை அமைத்து தண்ணீர் பம்பிங் செய்து, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கம்பம் பகுதியில் உள்ள கிராமங்களுக்கு சப்ளை செய்யலாம். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி கிராமங்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும். குடிநீர் தட்டுப்பாடும் நீங்கும். மேலும் மாசுபடாத குடிநீர் கிடைக்கும், கோடை காலங்களில் மட்டும் சுருளி அருவியில் தண்ணீர் வரத்து இருக்காது. ஆண்டிற்கு 9 மாதங்கள் தண்ணீர் கிடைக்கும். வெள்ளம் பெருக்கெடுத்து ஒடும் மழைகாலங்களில் தண்ணீரை தேக்கி வைத்து பயன்படுத்தலாம். இதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு நடத்த வேண்டும். தற்போது லோயர்கேம்பிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வழங்கினாலும், தேவைக்கேற்ப வழங்குவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது . எனவே சுருளிஅருவியில் இருந்து முல்லைப்பெரியாற்றில் கலக்கும் தண்ணீரை தேக்கி, சுத்திகரித்து வழங்க திட்டம் தயாரிக்க குடிநீர் வாரியம் நடவடிக்கை எடுக்க உள்ளாட்சி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ன.