திருவாரூரில் இருந்து தேனி வந்த நெல் நடவு இயந்திரங்கள் வேளாண் துறை ஏற்பாடு
கம்பம் : இயந்திர நெல் நடவிற்கு தேவையான இயந்திரங்களை வேளாண் துறை ஏற்பாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் இருந்து தேனிக்கு வந்துள்ளன.தேனி மாவட்டத்தில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் நெல் இரு போக சாகுபடியும், 5100 ஏக்கரில் ஒரு போக சாகுபடியும் நடைபெறுகிறது. நெல் அறுவடை பணிகளுக்கு இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து விட்டது. அதற்கு தேவையான இயந்திரங்கள் டெல்டா மாவட்டங்களில் இருந்து அறுவடை சமயங்களில் கொண்டு வரப்படுகின்றன.ஆனால்தேனியில் நடவு இயந்திரங்கள் யாரிடமும் கிடையாது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் இயந்திர நடவு மானியத்தை அறிவித்த மாநில வேளாண் துறை, கடந்த பல ஆண்டுகளாக நிறுத்தி விட்டது. இதனால் இயந்திர நடவை விவசாயிகளும் மறந்து விட்டனர்.இந்நிலையில் இந்தாண்டு தற்போது முதல் போக சாகுபடிக்கு கம்பத்திற்கு 880 ஏக்கர், சின்னமனூருக்கு 800 ஏக்கர் , உத்தமபாளையத்திற்கு 400 ஏக்கர் மாவட்டத்தில் பிற வட்டாரங்களுக்கும் சேர்த்து 5 ஆயிரம் ஏக்கர் இயந்திர நடவிற்கு இலக்கு நிர்ணயித்துள்ளது. நடவிற்கு பின் பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால் இயந்திர நடவு செய்ய இயந்திரங்கள் இல்லாததால் என்ன செய்வது என தெரியாத நிலை இருந்தது.இந்நிலையில் வேளாண் துறையினர் முயற்சி செய்து திருவாரூரில் இருந்து 10 நடவு இயந்திரங்கள் தேனிக்கு வரவழைத்துள்ளனர். வேளாண் துறையினர் கூறுகையில், திருவாரூரில் இருந்து 10 நடவு இயந்திரங்கள் வந்துள்ளது. ஏக்கருக்கு ரூ.3400 கட்டணமாக வசூலிக்கப்டுகிறது. விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றனர். இது தொடர்பான விபரங்களுக்கு விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.