மனைவி மண்டை உடைப்பு ஓய்வு ராணுவ வீரர் மீது வழக்கு
உத்தமபாளையம் : உத்தமபாளையம் அருகில் மனைவியை மண்டையை உடைத்த முன்னாள் ராணுவ வீரரான கணவர் மீது கோம்பை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர். உத்தமபாளையம் அருகில் உள்ள மேலச்சிந்தலச்சேரி மோனிஷா 28. இவருக்கும் ஓடைப்பட்டி நந்தகோபால் தெரு தாமரைச்செல்வனுக்கும் 36, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன் யோகித் 8, உள்ளார். தாமரைச்செல்வன் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். கணவன் மனைவிக்கு இடையே பிரச்னை ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். மோனிஷா மேலச்சிந்தலச்சேரியில் உள்ள தனது தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மேலச்சிந்தலச்சேரிக்கு வந்த தாமரைச்செல்வன், தனது மனைவியுடன் தகராறு செய்து செங்கலை எடுத்து மனைவியின் மண்டையில் தாக்கினார். இதில் தலையில் காயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மனைவி புகாரில் கோம்பை எஸ்.ஐ., பாண்டிச்செல்வி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் தாமரைச்செல்வன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றார்.