மூணாறில் புலி தாக்கி பசு பலி
மூணாறு: மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான மாட்டுபட்டி எஸ்டேட், டாப் டிவிஷனில் புலியிடம் சிக்கி கறவை பசு பலியானது.அங்கு தோட்ட தொழிலாளியான நடராஜின் கறவை பசு நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்று விட்டு வீடு திரும்பவில்லை. அதனை பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க இயலாத நிலையில், தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புகள் அருகே தேயிலை தோட்ட எண் 7ல் உடலில் பலத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை நேற்று காலை பார்த்தனர். பசுவை புலி தாக்கி கொன்றதாக தெரியவந்தது. அப்பகுதியில் காட்டு யானை, சிறுத்தை, புலி உள்பட வன விலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்துள்ளனர். அவற்றின் அத்துமீறல்களை தடுக்க வனத்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.