சேதமடைந்த அங்கன்வாடிகள், ரேஷன் கடைகளுக்கு கட்டடங்கள் கட்ட முடிவு
தேனி: அங்கன்வாடி கட்டடங்கள், ரேஷன்கடைகள் சேதமடைந்திருந்தால் அவற்றிற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.தேனி கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு, கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது. எம்.பி., தங்கதமிழ்செல்வன் தலைமை வகித்தார். கலெக்டர் ரஞ்ஜீத்சிங் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ., சரவணக்குமார், எஸ்.பி., சிவபிரசாத், டி.ஆர்.ஓ., மகாலட்சுமி, பெரியகுளம் சப்கலெக்டர் ரஜத்பீடன், உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., சையது முகமது, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அபிதா ஹனீப், மாவட்ட நிலையிலான அலுவலர்கள், தாசில்தார்கள், உள்ளாட்சி தலைவர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் துறைகள் சார்பில் நடந்து வரும் பணிகள், நடந்து முடிந்த பணிகள் பற்றி அதிகாரிகள் விளக்கினர். சேதமடைந்த அங்கன்வாடி மையங்கள், ரேஷன்கடைகள், பள்ளி கட்டடங்கள் பற்றி தெரிவிக்க வேண்டும். இவற்றிற்கு புதிதாக கட்டடம் கட்டப்படும் என கலெக்டர் பேசினார். பா.ஜ., எதிர்ப்பு:தேனி எம்.பி., மத்திய அரசு திட்டங்களை ஆய்வு செய்யாமல் கூட்டத்தில் பங்கேற்கிறார். சில திட்டங்களில் முறைகேடு நடந்துள்ளது. இந்த கூட்டம் கண் துடைப்பிற்காக நடத்தப்படுகிறது என கூறி பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் கட்சியினர் கருப்பு துணியுடன் ஆர்ப்பாட்டம் செய்தனர். போலீசார் கைது செய்ய முற்பட்டனர். இதனால் மதுரை ரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட 12 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.