நகராட்சிகளில் சர்வர் பிரச்னையால் கட்டட அனுமதி பெறுவதில் சிக்கல்
தேனி:நகராட்சிகளில் 'சர்வர் 'பிரச்னை நிலவுவதால் கட்டட அனுமதி பெறுவதில் தாமதம் நிலவுவதாக அதிகாரிகள் புலம்புகின்றனர். தமிழகத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகளிலும் கட்ட அனுமதி பெற்ற பின்னரே கட்டுமான பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனுமதி பெற ஆன்லைனில் மட்டும் விண்ணப்பித்து, பணம் செலுத்த வேண்டும்.அதிகபட்சம் 30 நாட்களுக்குள் அனுமதி வழங்க வேண்டும். ஆனால், நகராட்சிகளில் 10 நாட்களாக கட்டட அனுமதி பெற விண்ணப்பிக்கும் இணையதள சர்வர் முடங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் அனுமதி கோரி விண்ணப்பிப்பதில் சிரமம் நிலவுகிறது.பணம் செலுத்திய பின்பும் நகராட்சிகளின் கணக்குகளுக்கு பணம் செல்லவில்லை. இதன் காரணமாக கட்டட அனுமதி வழங்குவது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது.ஏற்கனவே உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தவர்களுக்கும் அனுமதி வழங்கினாலும், சர்வர் கேளாறு காரணமாக பதிவேற்ற முடிவதில்லை. இப்பிரச்னையால் பொதுமக்கள், அதிகாரிகள் தவிக்கின்றனர்.