இலவம் பஞ்சு கிலோ ரூ.42 ஆக விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம்; அரசு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வலியுறுத்தல்
மாவட்டத்தில் போடி. குரங்கணி, கொட்டகுடி, வலசத்துறை, வடக்கு மலை, வருசநாடு உள்ளிட்ட பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரில் இலவம் சாகுபடி உள்ளன. ஏப்., மே, ஜூன் மாதம் இலவம்காய் சீசன் ஆகும். கடந்த ஆண்டு போதிய மழை இருந்ததால் வழக்கத்தை விட நல்ல விளைச்சல் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இலவம் காயில் இருந்து பிரித்து எடுக்கப்பட்ட விதை பஞ்சு கிலோ ரூ. 65 முதல் ரூ.70 வரையும், சில்லரையில் கிலோ ரூ. 60 முதல் ரூ. 65 வரையும், அரைத்த சுத்தமான பஞ்சு கிலோ ரூ. 250 முதல் ரூ.270 வரை விலை இருந்தது. கடந்த ஆண்டு சீசன் துவங்கிய விதைப் பஞ்சு கிலோ ரூ.60 முதல் ரூ.70 ஆகவும் சில்லரையில் ரூ. 50 முதல் ரூ.55 வரை இருந்தது. அரைத்த சுத்தமான பஞ்சு ரூ.150 முதல் ரூ.170 வரை இருந்தது. இந்த ஆண்டு துவக்கத்தில் விதைப் பஞ்சு கிலோ ரூ.50 முதல் ரூ.55 வரையும், சில்லரையில் கிலோ ரூ. 45 முதல் ரூ. 50 வரை இருந்தது. அரைத்த சுத்தமான இலவம் பஞ்சு கிலோ ரூ.150 முதல் ரூ.160 வரை வியாபாரிகள் விலைக்கு வாங்கினர். தற்போது விதைப் பஞ்சு சில்லரையில் கிலோ ரூ.42 க்கும், அரைத்த சுத்தமான பஞ்சு கிலோ ரூ.140 முதல் 150 ஆக விலை குறைந்து உள்ளது. இலவம் பஞ்சுக்கு போதிய விலை இல்லை. குத்தகை எடுத்தோர் பாதிப்பு விவசாயிகள் கூறியதாவது: இலவம் காய் விளைச்சல் இருந்தும் போதிய விலை இல்லை. காய் பறிப்பு, உடைப்பு கூலி கூட கொடுக்க முடியாத வகையில் விலை உள்ளது. இதனால் இலவம் காய் பறிக்காமல் மரத்திலே விட்டுள்ளனர். மரத்திலே இலவம் காய் வெடித்து சிதறும் போது, இலவம் பஞ்சு வீணாக காற்றில் பறந்து செல்கின்றன. மரம் பராமரிப்பு, காய் பறிப்பு, பஞ்சு பிரித்தெடுப்பு செலவுகளை கணக்கிட்டால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது. இந்த ஆண்டு இலவம் தோட்டம் குத்தகைக்கு எடுத்தவர்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கூலித் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் பயன் பெறும் வகையில் போடியில் அரசு இலவம் பஞ்சு தொழிற்சாலை அமைக்கவும், இலவம் பஞ்சுக்கு குறைந்தபட்ச விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.