ஐயப்ப பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம்
கூடலுார்: சபரிமலைக்கு மகரஜோதி விழாவிற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. கேரளா குமுளியில் ஐயப்ப பக்தர்களுக்காக இலவச மருத்துவ முகாம் துவக்க இடுக்கி கலெக்டர் சமீபத்தில் உத்தரவிட்டார். முகாம் நடத்துவதற்காக தேர்வு செய்யப்பட்டிருந்த கட்டடத்தில் அனுமதி வழங்க வனத்துறை மறுத்தது. இந்நிலையில் குமுளி ஊராட்சித் தலைவர் எம்.எம்.வர்கீஸ் பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் ராஜு ஆகியோர் தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. இதனை தொடர்ந்து வழங்கப்பட்ட அனுமதிக்குப் பின் நேற்று ஐயப்ப பக்தர்களுக்காக இலவச மருத்துவ முகாமை ஊராட்சித் தலைவர் வர்கீஸ் துவக்கி வைத்தார். ஆயுர்வேதம், சித்தா, ஹோமியோபதி, அலோபதி ஆகிய நான்கு மருத்துவ பிரிவுகளின் கீழ் சிகிச்சை வழங்கப்பட்டன. 24 மணி நேரமும் இந்த சேவை தொடரும் என அறிவிக்கப்பட்டது.