தெருக்களில் குப்பை, கழிவுநீர் அகற்றததால் சுகாதார சீர்கேடு
போடி: போடி மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட வினோபாஜி காலனியில் ரோடு, சாக்கடை, தெரு விளக்கு, உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.போடி அருகே மேலச்சொக்கரபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட 5 வது வார்டு வினோபாஜி காலனியில் காந்தி தெரு, விநாயகர் கோயில் தெரு, கருப்பசாமி கோயில் தெரு, ஹாஸ்டல் தெரு உள்ளிட்ட தெருக்கள் அடங்கி உள்ளன. 800க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப் பகுதியில் ரோடு சேதமடைந்து குண்டும், குழியுமாகவும், மண் மேடாகவும் உள்ளது. சாக்கடை வசதி இன்றி வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தேங்கி சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருக்களில் குப்பை கழிவுகள் அகற்றாமல் தேங்கி உள்ளதால் துர்நாற்றம் வீசுகிறது. அடிப்படை வசதி செய்து தர மக்கள் தொடர்ந்து வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. இப் பகுதியில் நிலவும் மக்கள் பிரச்னை குறித்து கூறியதாவது :எரியாத தெருவிளக்குகள்சிவா, வினோபாஜி காலனி, மேலச்சொக்கநாதபுரம் : முத்து விநாயகர் கோயில் தெருவில் ரோடு அமைத்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ரோடு சேதமடைந்து கற்கள் பெயர்ந்து உள்ளது. பாதாள சாக்கடைக்கான சிலாப்புகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் டூவீலரில் செல்லும் போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. சாக்கடை வசதி இன்றி மழைக் காலங்களில் கழிவுநீர் தேங்கி மக்கள் நடந்து செல்ல சிரமம் அடைந்து வருகின்றனர். மின் டிரான்ஸ்பார்மர் சேதம் அடைந்து உள்ளது. தெருக்களில் மின்கம்பம் இருந்தும் விளக்கு வசதி இல்லை. இரவு நேரங்களில் இருளில் மூழ்கி உள்ளதால் பெண்கள் இரவு நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இறுதி ஊர்வலம் செல்வதில் சிரமம்வீராச்சாமி, வினோபாஜி காலனி, மேலச்சொக்கநாதபுரம் : 2 வது தெருவில் ரோட்டில் கற்கள் பெயர்ந்து குண்டும். குழிமாக உள்ளது. சாக்கடை தலைப்பாலம் சேதம் அடைந்து வாகனம் செல்ல முடியாத நிலையில் பள்ளமாக உள்ளது. இதனால் இறந்தவர்களின் சடலங்களை கொண்டு செல்ல முடியாமல் சிரமம் மக்கள் சிரம்ம் அடைந்து வருகின்றனர். தெருவின் மையத்தில் பாதாள சாக்கடை சிலாப்புகள் உயரமாக உள்ளன. இதனால் வாகனங்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. சேதம் அடைந்த சாக்கடை தரைப் பாலத்தை சீரமைப்பதோடு, உயரமான சிலாப்புகளை சரி செய்யும் வகையில் ரோடு வசதி செய்து தர மேலச் சொக்கநாதபுரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.குப்பை அகற்றாமல் எரிப்புஅழகுமலை, அப்துல் கலாம் நகர்,மேலச்சொக்கநாதபுரம் : வினோபாஜி காலனி - மேலச்சொக்கநாத புரம் செல்லும் ரோட்டில் டாஸ்மாக் கடை உள்ளது. மது குடிப்போர் ரோட்டில் மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகளை போட்டு செல்கின்றனர். இதனை பேரூராட்சி நிர்வாகம் அகற்றாமல் தீ வைத்து வருவதால் துர்நாற்றம் வீசுவதோடு நடந்து செல்லும் மக்களுக்கு சுவாச கோளாறு உட்பட பல்வேறு வகையில் சுகாதாரகேடு ஏற்படுகிறது. தெருவிளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் குடிப்பிரியர்களின் தொந்தரவு அதிகரித்து வருவதால் இரவில் பெண்கள் நடந்து செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். ரோட்டில் தேக்கமான பிளாஸ்டிக், குப்பை கழிவுகளை அகற்ற மேலச்சொக்கநாத புரம் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.