கேரளாவில் அக்.22 வரை பலத்த மழைக்கு வாய்ப்பு இன்று 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
மூணாறு: கேரளாவில் அக்.22 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ள நிலையில், இன்று (அக்.19) நான்கு மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்தது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை அக்.16ல் முடிவுக்கு வந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்த நிலையில், தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் பகலில் மழை சற்று குறைந்த நிலையில், பல மாவட்டங்களில் இரவு முழுதும் பலத்த மழை பெய்தது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் நேற்று அதிகாலை வரை கொட்டித் தீர்த்த மழையால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டன. இம்மாநிலத்தில் அக்.22 வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. நேற்று மதியம் 1:00 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில் இடுக்கி, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களுக்கு கன மழைக்கான ' ஆரஞ்ச் அலர்ட்' விடுத்தது. நிறுத்தம் இடுக்கி மாவட்டத்தில் நேற்று மழை குறைந்ததால் மதியம் வரை சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டன. அதன் பிறகு ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டதால் சுற்றுலா படகு சேவை நிறுத்தப்பட்டது. அதனால்விடுமுறையில் வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ' ஆரஞ்ச் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் அக்.22 வரை பல மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' எச்சரிக்கை விடப்பட்டது. இன்று பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு. அக். 20ல் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணுார், காசர்கோடு. அக்.21ல் பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் அக்.22ல் கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு ஆகிய மாவட்டங்களுக்கு ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டது.