பள்ளி மைதானத்தை மீட்க வழக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை : உத்தமபாளையம் அருகே திம்மிநாயக்கன்பட்டியில் பள்ளி மைதானத்தை மீட்டு வேலி அமைக்க தாக்கலான வழக்கில் மனுவை அதிகாரிகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திம்மிநாயக்கன்பட்டி சகாபுதீன் தாக்கல் செய்த பொதுநல மனு: பொட்டிப்புரம் ஊராட்சிக்குட்பட்டது திம்மிநாயக்கன்பட்டி. இங்கு குறிப்பிட்ட சர்வே எண்ணில் பள்ளிக் கல்வித்துறைக்கு சொந்தமான காலி இடம் உள்ளது. அங்கிருந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி தற்போது செயல்படவில்லை. பள்ளி விளையாட்டு மைதானத்தை மாணவர்கள் பயன்படுத்துகின்றனர். மைதானத்தை இரு தரப்பை சேர்ந்த சிலர் ஆக்கிரமிக்க முயற்சித்து கொடிக் கம்பங்களை நட்டனர்.இரு தரப்பிலும் மாறிமாறி போலீசில் புகார் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரசு தரப்பில் நடந்த சமாதான கூட்டத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற, சுற்றிலும் வேலி அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதை நிறைவேற்ற அரசு தரப்பில் நடவடிக்கை இல்லை. கலெக்டர், கல்வி மாவட்ட அதிகாரி, சின்னமனுார் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மனு அனுப்பினேன். மைதானத்தை மீட்டு வேலி அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு: மனுவை அதிகாரிகள் பரிசீலித்து 3 மாதத்தில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.