இடுக்கி உள்ளாட்சி வார்டு மறுசீரமைப்பு 52 ஊராட்சிகளில் வார்டுகள் அதிகரிப்பு
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள் வார்டு மறு சீரமைப்பில் ஊராட்சிகளில் 45 வார்டுகள் அதிகரித்துள்ளது.கேரளாவில் அடுத்த ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளது. அதற்கு முன்பாக வார்டுகள் மறு சீரமைக்கப்பட்டு, அதன் பட்டியல் வெளியிட்டது. அதன்படி இடுக்கி மாவட்டத்தில் 52 ஊராட்சிகளில் 45 வார்டுகள் அதிகரித்த நிலையில் 3 வார்டுகள் குறைந்தன.மாவட்டத்தில் 52 ஊராட்சிகள், 8 ஒன்றியங்கள், 2 நகராட்சிகள், ஒரு மாவட்ட பஞ்சாயத்து ஆகியவை உள்ளன.அதில் 52 ஊராட்சிகளில் பத்து ஊராட்சி வார்டுகளில் எவ்வித மாற்றமும் இல்லை. 34 ஊராட்சிகளில் தலா ஒரு வார்டு வீதம், 4 ஊராட்சிகளில் தலா 2 வார்டுகள் வீதம், ஒரு ஊராட்சியில் 3 வார்டுகள் என அதிகரிக்கப்பட்டன. அதன்படி 52 ஊராட்சிகளில் வார்டுகள் 792ல் இருந்து 834 ஆக அதிகரித்தது.8 ஊராட்சி ஒன்றியங்களில் வார்டுகள் 104ல் இருந்து 112, மாவட்ட பஞ்சாயத்தில் 16 ல் இருந்து 17 வார்டுகள் அதிகரிக்கப்பட்டன.தொடுபுழா நகராட்சியில் 3, கட்டப்பனை நகராட்சியில் 1 வீதம் வார்டுகள் அதிகரித்தது.மூணாறு ஊராட்சியில் 21ல் இருந்து 20, தேவிகுளம், பீர்மேடு ஆகிய ஊராட்சிகளில் 18ல் இருந்து 17 என வார்டுகள் குறைந்தன.