அணைப்பிள்ளையார் அணையில் நீர்வரத்து அதிகரிப்பு
போடி, : போடி பகுதியில் மழை இன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் கொட்டகுடி ஆற்றுப் பகுதியில் நீர்வரத்து இன்றி காணப்பட்டது. கடந்த ஆறு நாட்களாக குரங்கணி, கொட்டகுடி பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் போடி, சிலமலை, ராசிங்காபுரம், சங்கராபுரம் உள்ளிட்ட பகுதியில் 2 நாட்களாக இடியுடன் மழை பெய்தது. குரங்கணி பகுதியில் பெய்த மழையால் கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து வர துவங்கியது. இதனையொட்டி பங்காருசாமி நாயக்கர் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய், சங்கரப்பன் கண்மாய், புதுக்குளம் கண்மாய்களுக்கு நீர்வரத்து வந்த நிலையில் உள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.போடி மூணாறு செல்லும் முந்தல் ரோட்டில் உள்ள அணைப்பிள்ளையார் அணை பகுதியில் தடுப்பணையை தாண்டி வெள்ளியை உருக்கி விட்டார் போல, நீர் அருவியாய் கொட்டி வருகிறது. இங்கு சுற்றுலா பயணிகள், மக்களும் குளித்து மகிழ்கின்றனர்.