முல்லைப் பெரியாறு அணையில் நீர் திறப்பு 1100 கன அடியாக அதிகரிப்பு; கேள்விக்குறியாகும் 2ம் போக நெல் சாகுபடி
கூடலுார் : முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப்பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு 1100 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. இதனால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளதால் இரண்டாம் போக நெல் சாகுபடி கேள்விக்குறியாகியுள்ளது.கம்பம் பள்ளத்தாக்கில் இந்த அணையின் நீரை நம்பி 14 ஆயிரத்தது 707 ஏக்கர் நிலப்பரப்பில் இருபோக நெல் சாகுபடி நிலங்கள் உள்ளன. முதல் போக நெல் சாகுபடிக்கான அறுவடை ஏறக்குறைய முடிவுக்கு வந்த நிலையில் இரண்டாம் போகத்திற்கான நாற்றங்கால் அமைக்கும் பணிகள் நடக்கின்றன.அணையில் நீர் இருப்பை உறுதி செய்து இரண்டாம் போக விவசாயத்தை துவக்க பொதுப்பணித்துறையினர் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளனர். ஆனால் முதல் போகத்தைத் தொடர்ந்து 2ம் போக சாகுபடிக்காக நாற்றுகள் வளர்க்க விவசாயிகள் துவங்கி விட்டனர். நீர் திறப்பு அதிகரிப்பு
இந்நிலையில் அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு 456 கன அடியாக இருந்த நீர் திறப்பை நேற்று காலை 6:00 மணியில் இருந்து திடீரென வினாடிக்கு 1100 கன அடியாக அதிகரித்துள்ளனர்.இதனால் நீர்மட்டம் குறையும் வாய்ப்புள்ளது. அணை நீர்மட்டம் 123.35 அடியாக உள்ளது(மொத்த உயரம் 152 அடி). அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 347 கன அடியாக உள்ளது. நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. நீர் இருப்பு 3291 மில்லியன் கன அடியாகும்.இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் சூழலில் திடீரென அதிகாரிகள் நீர்திறப்பை அதிகரித்தது விவசாயிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை மேலும் தீவிரமடைந்து நீர்மட்டம் வெகுவாக உயர்ந்தால் மட்டுமே விவசாயிகளுக்கு தீர்வு கிடைக்கும். மின் உற்பத்தி அதிகரிப்பு
லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் 41 மெகா வாட்டாக இருந்த மின் உற்பத்தி நீர் திறப்பு அதிகரிப்பால் 99 மெகாவாட்டாக அதிகரிக்கப்பட்டது.