முல்லைப்பெரியாறு அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு 130 ஆண்டுகளாகிறது பென்னிகுவிக் மணிமண்டபத்தில் கொண்டாட முடிவு
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகப் பகுதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு இன்றுடன் (10.10.2025) 130 ஆண்டுகளாகிறது. தலைமுறை கடந்தும் தமிழகத்தை காக்கும் பெரியாறு அணை இன்றும் கம்பீரமாக உள்ளது. 18ம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட பஞ்சத்தில் தென் தமிழகத்தில் விவசாயம் சீர்குலைந்து அதை நம்பியிருந்த மக்கள் பசி பட்டினியால் சொந்த நிலத்தை விட்டு புலம் பெயரத் துவங்கினர். தமிழகத்தில் 2400 மீட்டர் உயரத்தில் சிவகிரி மலையில் தோன்றி 300 கி.மீ., வடமேற்கு திசையில் ஓடி அரபிக் கடலில் கலந்த தண்ணீரை தென் தமிழகம் நோக்கி திருப்பி கொண்டு வர 1798ல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் முடிவு செய்தார். நிதி பற்றாக்குறை, சரியான திட்டமிடலின்றி முயற்சி தோல்வி அடைந்தது. இறுதியில் பிரிட்டிஷ் அரசின் அனுமதியுடன் கர்னல் ஜான் பென்னிகுவிக் இதற்கான திட்டத்தை தயார் செய்தார். அவரது திட்டப்படி முல்லைப் பெரியாறு குன்றுகளையும் மலைகளையும் கடந்து மேற்கு நோக்கி ஓடும் போது கடந்து செல்ல வேண்டிய குறுகிய ஆழமான மலை இடுக்கில் ஓர் அணை கட்டி நதியின் ஓட்டத்தை சிறிது தூரத்திற்கு கிழக்குப் பக்கம் திருப்பி, வைகை நதியில் இணைக்க முடிவு செய்தார். அணை கட்டி முடிக்கப்பட்டால் தண்ணீர் தேங்கும் நிலப்பரப்பு திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைக்குள் வருவதால் திருவிதாங்கூர் மகாராஜாவுடன் நடத்திய பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு 1886 அக்டோபர் 29ல் முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் உருவானது. தலைமுறை கடந்தும் தண்ணீர் தரும் அணை இந்த அணை நீரானது எல்லா காலங்களிலும் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் அந்த ஒப்பந்தம் 999 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ரூ.43 லட்சம் திட்ட மதிப்பீட்டில் கர்னல் பென்னிகுவிக் தலைமையில் பிரிட்டிஷ் ராணுவத்தின் கட்டுமானத்துறை இந்த அணைக்கட்டும் பணிகளை மேற்கொண்டது. அணை கட்டி முடிக்கப்பட்ட போது அணைக்காக ரூ.81.30 லட்சம் செலவு செய்யப்பட்டது. பென்னிகுவிக்கின் தீவிர முயற்சியினால் 1895ல் அணை கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டு அக்டோபர் 10 மாலை 6:00 மணிக்கு சென்னை மாகாண கவர்னர் வெண்லாக் தேக்கடிக்கு வந்து பெரியாறு அணை தண்ணீரை தமிழகப் பகுதிக்கு திறந்து வைத்தார். 130வது ஆண்டு
அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட இந்நாளை தென் மாவட்டங்களில் விவசாயிகள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். இன்று முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்ட 130ம் ஆண்டை கொண்டாடும் விதம் விவசாய சங்கங்கள் முல்லைப் பெரியாற்றங்கரை தலை மதகில் பொங்கல் வைத்து வழங்கவுள்ளனர்.