கிருஷ்ண ஜெயந்தி உறியடி திருவிழா; வழுக்கு மரம் ஏறி சிறுவன் சாதனை
கம்பம் : கம்பத்தில் நடந்த கிருஷ்ண ஜெயந்தி விழாவில் உறியடி திருவிழாவில் ஹர்சன் 13, என்ற சிறுவன் வழுக்கு மரம் ஏறி சாதனை படைத்தார். ஏராளமான இளைஞர்கள் ஆர்வமாய் பங்கேற்றனர். இங்குள்ள யாதவ மடாலயத்தில் உள்ள வேணுகோபால் கிருஷ்ணன் கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இவ் விழாவில் முக்கிய நிகழ்வான கருடாழ்வார் வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்கரிக்கப்பட்ட கருடாழ்வார் வாகனத்தில் கம்ப ராயப் பெருமாள் ஊர்வலமாக சென்று வேலப்பர் கோயில் முன்பு நின்றது. அங்கு அதிகாலை 12 மணியளவில் 30 அடி உயரமுள்ள கம்பத்தில் வழுக்கு மரம் ஏறுதல் மற்றும் உறியடி நிகழ்ச்சிகள் நடந்தது. இளைஞர்களும், பெரியவர்களும் ஆர்வத்துடன் போட்டி போட்டு வழுக்கு மரம் ஏறினர். மாலையம்மாள்புரத்தை சேர்ந்த ஹர்சன் என்ற 13 வயது சிறுவன் வழுக்கு மரம் ஏறி, மரத்தின் உச்சியில் கட்டப்பட்டிருந்த பரிசு பொருள்களை அவிழ்த்து சாதனை புரிந்தார். கடந்தாண்டு நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியிலும் ஹர்சன் வென்று பரிசு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.