மக்காச்சோளம் அறுவடைக்கு பின் நிலத்தில் இயற்கை உரமேற்றும் பணி
போடி: போடி விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் பகுதியில் மக்காச்சோளம் அறுவடை முடிந்த நிலங்களில் இயற்கை முறையில் உரம் சேர்க்கும் பணி மும்முரமாக நடக்கிறது.போடி அருகே மீனாட்சிபுரம், பொட்டல்களம், விசுவாசபுரம், மேலச் சொக்கநாதபுரம் உள்ளிட்ட பகுதியில் 800 ஏக்கருக்கு மேல் சோளம், மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டது. மீனாட்சிபுரம் கண்மாயில் தொடர்ந்து நீர் தேங்கி வருவதால் ஆண்டு தோறும் நெல், சோளம், மக்காச்சோளம் சாகுபடி விசுவாசபுரம், பத்திரகாளிபுரம் பகுதியில் நடைபெறும். தற்போது மக்காச்சோளம் அறுவடை முடிந்த பகுதியில் விளை நிலங்களில் உழவு செய்து விதைப்புக்கு தயார் படுத்தி வருகின்றனர். இயற்கை உரங்களால் நிலத்தின் உயிர் தன்மையை நிலை நிறுத்த இயற்கை உரமிட்டு வருகின்றனர். மேய்ச்சலுக்கு செல்லும் ஆடுகளை நிலங்களில் மேய்ச்சலுக்கும், கிடை அமைத்து அதன் சாணத்தை உரமாக்கி வருகின்றனர். இயற்கை உரமேற்றும் பணியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில் : இயற்கை உரங்களால் மண்ணின் உயிர் தன்மை அதிகரித்து காணப்படும். ஆடு, மாடுகளின் சாணம், அதன் சிறுநீரில் மண்ணுக்கு தேவையான நைட்ரேட் சத்துக்கள் உள்ளன. இதனால் 50 முதல் 100 ஆடுகளை விளை நிலங்களில் கிடை ஏற்படுத்தி மண்ணின் தரம் உயர்த்துவதால் விளைச்சல் அதிகமாகும் என்றனர்.