உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி /  பழைய பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் : தேனி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

 பழைய பஸ்ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் : தேனி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் குமுறல்

தேனி: தேனி பழைய பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுவதாக நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர். தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் அவசர கூட்டம் நடந்தது. பொறியாளர் குணசேகரன், நகர்நல அலுவலர் டாக்டர் கவிபிரியா முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் செல்வம், மேலாளர் வெங்கடாஜலபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நகராட்சியில் பணிபுரியும் 309 துாய்மை பணியாளர்களுக்கு தினமும் ஒருவேளை உணவு வழங்கும் திட்டத்தை மூன்று ஆண்டுகள் செயல்படுத்த ரூ. 1.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்தும், அவர்களுக்கு ரூ.295 மதிப்பில் டிபன்பாக்ஸ், ரூ.190 மதிப்பில் உணவு வழங்கும் பை வாங்குவது, சிறப்பு வாக்காளர் திருத்தப்பணிக்கு ரூ.5லட்சம் ஒதுக்கீடு செய்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:

ஒரே வீடு இரு முகவரி

கிருஷ்ணபிரபா (அ.தி.மு.க.,): 5வது வார்டில் உள்ள கிணற்றுதெருவில் உள்ள மாடிவீடுகளில் கீழ் வீடு கிணற்றுதெரு, மேல்வீடு மச்சால்தெரு என பதிவேடுகளில் உள்ளது. இதனால் பத்திரபதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். கால்நடைகள், நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ராஜ்குமார்(தி.மு.க.,): சிவராம் நகர்பகுதியில் சாக்கடை, ரோடு அமைக்கும் பணி 2.5 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. நகராட்சி பொறியாளர்: தேர்தல் உள்ளிட்டவற்றால் தாமதம் ஆனது. சாக்கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தலைவர்: ஒப்பந்ததாரர்களை பணிகளை விரைவாக முடிக்க கூறுங்கள்.துணைத்தலைவர்: பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஆக்கிரமிப்பு அதிகரித்துள்ளது. அதனை அகற்ற அதிகாரிகள் தயக்கம் காட்டுகின்றனர். தலைவர்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் கலெக்டரிடம் தெரிவிக்கப்படும்.சுப்புலட்சுமி(காங்.,): ஒண்டிவீரன் நகர்பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் சுகாதார வளாகம் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். மணிகண்டன்(தி.மு.க.,): உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் வரி செலுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மக்கள் மனு அளித்திருந்தனர். ஆனால், பல மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவிக்கின்றனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சதீஷ்(தி.மு.க.,): மழை காலம் துவங்கி உள்ளதால் கொசுக்கள் தொல்லை அதிகரித்துள்ளது. அனைத்து வார்டுகளிலும் கொசுமருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை