பெற்றோர் மாணவர்களின் முயற்சிக்கு ஆதரவு தர வேண்டும் : கல்லுாரி விழாவில் கலெக்டர் பேச்சு
தேனி:மாணவர்களின் முயற்சிகளுக்கு பெற்றோர்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என கல்லுாரியில் நடந்த விழாவில் கலெக்டர் ரஞ்ஜீத்சிங் பேசினார். தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லுாரியில் முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடந்தது. அவர் பேசுகையில், 'பள்ளி படிப்பதற்கும், கல்லுாரி படிப்பிற்கும் வேறுபாடு உள்ளது. கல்லுாரியில் படிக்கும் போது முடிவுகளை மாணவர்கள் எடுக்க வேண்டும். இலக்கு நிர்ணயித்து செயல்பட வேண்டும். இலக்கை அடிக்கடி மாற்றக்கூடாது. தொழில்நுட்பங்களை பயன்படுத்திக்கொள்ளவேண்டும். எதிர்மறை எண்ணம் கொண்டவர்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும். இடம், பொருள், பொறுப்பு அறிந்து பேசும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். பெற்றோர்,நண்பர்களுடன் ஆலோசிக்க வேண்டும். பெற்றோர்கள் மாணவர்களின் முயற்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்,' என்றார். தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறைத்தலைவர் தர்மராஜன், துணைத்தலைவர் ஜீவகன், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் ராமசந்திரன், கல்லுாரி செயலாளர் சோமசுந்தரம் இணைச்செயலாளர் சுப்பிரமணி முன்னிலை வகித்தனர். கல்லுாரி மாணவர்கள் தயாரித்த செயலி வெளியிடப்பட்டது. உயர்வுக்கு அலைபேசி பயன்படுத்துங்கள் உலக தமிழ்சங்க துணைத்தலைவர் பர்வீன் சுல்தானா பேசுகையில், 'உலகில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. அதனை அடைவதற்கு மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். கல்லுாரி படிப்பபை முடிப்பதற்குள் சான்றிதழ் படிப்புகளையும் முடித்துக்கொள்ள வேண்டும். அது எதிர்காலத்திற்கு உதவும். கற்றவருக்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு. வாழ்வில் உயர அலைபேசி பயன்படுத்துங்கள், அதற்கு அடிமையாகி விடாதீர்கள். விலைமதிப்பில்லாத பொக்கிஷம் பெற்றோர்கள். அவர்கள் எதிர்பார்க்கும் சிலவற்றை மாணவர்கள் செய்ய வேண்டும். பெற்றோர்கள் ஆசிரியர்களை மாதம் ஒரு முறைசந்தியுங்கள்,' என்றார். கல்லுாரி முதல்வர் மதளைசுந்தரம் தலைமையில் துணைமுதல்வர்கள், பேராசிரியர்கள் விழாவை ஒருங்கிணைத்தனர்.