விடுதி வார்டன் துன்புறுத்துவதாக குறைதீர் கூட்டத்தில் மாணவிகள் புகார் பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
தேனி: கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்தில் அரசு விடுதி வார்டன் துன்புறுத்துவதாக மாணவிகள் புகார் அளித்தனர். கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனீப் முன்னிலையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் நேர்முக உதவியாளர்கள் முத்து மாதவன்(பொது), பிரகாஷ்(ஊரக வளர்ச்சி) உள்ளிட்டோர் பங்கேற்றனர். பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 213 மனுக்களை வழங்கினர்.இதில் கோட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் அனிதா, மாலதி, அனுபிருந்தா வழங்கிய மனுவில், 'நாங்கள் கோட்டூர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் தங்கி படித்து வருகிறோம். அந்த விடுதியில் வார்டனாக சசிரேகா, சமையலராக மாலதி பணிபுரிகின்றனர். இவர்கள் விடுதியில் தங்கி உள்ள மாணவிகளை அடிப்பது, அனைத்து வேலைகளையும் செய்ய கூறி துன்புறுத்துகின்றனர். இதனால் படிக்க முடியவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கோரினர்.இந்திய ஐக்கிய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் பெத்தாட்சி ஆசாத் மனுவில், 'தேனி புதிய பஸ் ஸ்டாண்டிற்கு தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் வந்து செல்கின்றனர். பஸ் ஸ்டாண்டை கடந்து அரசு அலுவலகங்கள், பத்திர பதிவு அலுவலகங்களுக்கு செல்கின்றனர். ஆனால் போதிய அளவில் ஏ.டி.எம்.,மையங்கள் இல்லலை. இதனால் நகர்பகுதிக்கு சென்று வரும் நிலை உள்ளது. இப்பகுதியில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம்., நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.மதுராபுரி மேற்கு தெரு பொதுமக்கள் சார்பாக வீரராஜ் வழங்கிய மனுவில், 'குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும்,' என குறிப்பிடப்பட்டிருந்தது.தமிழ்நாடு நாயுடு நாயக்கன் உறவின்முறை பாதுகாப்பு இயக்க மாவட்ட தலைவர் பாலாஜி மனுவில், தெலுங்கு மொழி பேசுபவர்கள் பற்றி இழிவாக பேசிய நடிகை கஸ்துாரி மீது வழக்கு பதிந்து கைது செய்ய வேண்டும். கணவர் மீது மனைவி புகார்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பண்ணைக்காடு நிர்மலாதேவி மனுவில், 'எனது கணவர் தேனி மாவட்டத்தில் போலீசாக பணிபுரிகிறார். எங்களுக்கு 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. சில நாட்களில் கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். மற்றொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என இருந்தது.ஆர்ப்பாட்டம்:பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் தலைமையில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை பணிநிரந்தம் செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியில் பணிநிரந்தம் பற்றி கூறப்பட்டுள்ளது. இதனை நிறைவேற்ற வேண்டும். என வலியுறுத்தினர். நிர்வாகிகள் பாபு, ராமமூர்த்தி, பாபு, அம்சராஜன், பாலமுருகன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.