| ADDED : ஜன 05, 2024 10:52 PM
கூடலுார்:முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 511 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின் நிலையத்தில் மின் உற்பத்தியும் குறைந்தது.2023 டிச.23 ல் அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியபின் மழை குறைய துவங்கியது. இதனால் நீர்மட்டமும் குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்கிறது. நேற்று காலை 6:00 மணி நிலவரப்படி தேக்கடியில் 17.2 மி.மீ., பெரியாறில் 15.4 மி.மீ., மழை பெய்தது. நீர்வரத்து வினாடிக்கு 716 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 6319 மில்லியன் கன அடியாகும். நீர்மட்டம் 136.80 அடியாக இருந்தது (மொத்த உயரம் 152 அடி). இந்நிலையில் தமிழகப் பகுதிக்கு வினாடிக்கு 1867 கன அடியாக இருந்த நீர் திறப்பு நேற்று காலையில் இருந்து 511 கன அடியாக குறைக்கப்பட்டது. மழை அதிகரித்தால் நீர்மட்டம் உயரும் வாய்ப்புள்ளது. குறைந்தது மின் உற்பத்தி
கடந்த சில நாட்களாக தமிழகப் பகுதிக்கு 1867 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் தேனிமாவட்டம் லோயர்கேம்ப் பெரியாறு நீர்மின்நிலையத்தில் 4 ஜெனரேட்டர்களிலும் முழு அளவான 168 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. நேற்று காலை நீர் திறப்பு குறைக்கப்பட்டதால் 2 ஜெனரேட்டர்களில் மின்உற்பத்தி 46 மெகாவட்டாக குறைந்தது.