மாவட்ட தடகள அணி வீரர்கள் தேர்வு மாணவர்கள் ஆர்வமாய் பங்கேற்பு
கூடலுார்: மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் பங்கேற்க, தேனி மாவட்ட தடகள அணிக்கான வீரர்கள் தேர்வு கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மாநில தடகள சங்கம் சார்பில் சென்னை மேலக்கோட்டையூர் தமிழ்நாடு விளையாட்டு பல்கலையில் மாவட்டங்களுக்கு இடையிலான ஜூனியர் தடகளப் போட்டிகள் நடக்க உள்ளன. இதில் தேனி மாவட்டம் சார்பில் பங்கேற்பதற்காக வீரர்கள் தேர்வு செய்யும் போட்டி கூடலுார் என்.எஸ்.கே.பி., மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. பள்ளித் தலைவர் பொன்குமரன், பொருளாளர் சிவாபகவத் தலைமையில் தாளாளர் ராம்பா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் வெங்கட்குமார் வரவேற்றார். 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 600 மீட்டர் ஓட்டம். 16 வயதிற்கு உட்பட்ட பிரிவில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், 600 மீட்டர் ஓட்டம். 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 100மீ., 200 மீ., 400 மீ., 1000 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல். 20 வயதுக்கு உட்பட்ட பிரிவில் ஓட்டம், மும்முறை தாண்டுதல், கோல் ஊன்றி தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. 60க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு போட்டியிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் சென்னையில் நடைபெற உள்ள மாவட்டங்களுக்கு இடையிலான தடகளப் போட்டியில் தேனி மாவட்டம் சார்பில் கலந்து கொள்வார்கள். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட தடகள கழக செயலாளர் அஜய் கார்த்திக்ராஜா, என்.எஸ்.கே.பி., பள்ளி உடற்கல்வி இயக்குனர் கருத்தபாண்டியன், தேனி என்.எஸ்., மேல்நிலைப்பள்ளி தடகளப்போட்டி ஆலோசகர் கணேஷ்குமார், ஒருங்கிணைப்பாளர் ராம்குமார்ஆகியோர் செய்திருந்தனர்.