கணக்கெடுக்கும் பணி 45 சதவீதம் நிறைவு
தேனி; மாவட்டத்தில் வீடுகளுக்கு சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி 45 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உபகரணங்கள், திட்டங்கள் வீடுகளுக்கு சென்று வழங்க தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை நடவடிக்கை எடுக்க உள்ளது. இதற்காக வீடு வாரியாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுக்கும் பணி இரு மாதங்களுக்கு முன் தமிழகம் முழுவதும் துவங்கியது. இத்திட்டம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு தனியார் அறக்கட்டளை ஊழியர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு சென்று மாற்றுத்திறனாளிகள் உள்ளனரா, எவ்வகை குறைபாடு, அவர்களின் அடையாள எண், அரசு அடையாள சான்றுகள் இல்லை என்றால் அதனை பெறுவதற்கு பதிவு செய்தல் என இப்பணி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள 4.32 லட்சம் வீடுகளில் கணக்கெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஊரகம், நகர்பகுதி என பிரித்து பணிகள் நடந்து வருகிறது. இதுவரை 2.05 லட்சம் வீடுகள் அதாவது 45.9 சதவீத வீடுகளுக்கு சென்று களப்பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியை நிறைவு செய்துள்ளனர். அவர்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாற்றத்திறனாளிகள் நலத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.