உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு

வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்வு

ஆண்டிபட்டி: பெரியாறு அணையில் இருந்து வரும் நீரால் வைகை அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து வருகிறது.வைகை அணையில் இருப்பில் இருந்த நீர் சில வாரங்களாக மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களின் பாசனத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. ஜூன் 15ல் வைகை அணை நீர்மட்டம் 61.22 அடியாக இருந்த நிலையில் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள பெரியாறு பிரதான கால்வாய் பாசன பகுதியில் உள்ள இரு போக பாசன நிலங்களின் முதல் போகத்திற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 900 கன அடி வீதம் நீர் திறந்து விடப்பட்டு தற்போதும் தொடர்கிறது. கேரளாவில் பெய்த மழையால் பெரியாறு அணையில் இருந்து வரும் நீரின் அளவு அதிகரித்தது. இதனால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்தது.ஜூன் 25ல் நீர்மட்டம் 63.27 அடியாக இருந்த போது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வைகை பூர்வீக பாசன நிலங்களுக்கு ஆற்றின் வழியாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் ஆற்றின் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, ஏழு நாட்களுக்குப் பின் நிறுத்தப்பட்டது. பாசனத்திற்கு நீர் தொடர்ந்து வெளியேறியதால் அணை நீர்மட்டம் ஜூலை 2ல் 59.02 அடியாக குறைந்தது. சில நாட்களில் அணையில் திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகம் இருப்பதால் அணை நீர்மட்டம் மீண்டும் உயர்ந்து நேற்று 60.60 அடியாக இருந்தது. அணை உயரம் 71 அடி. அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1758 கன அடி. மதுரை, தேனி, ஆண்டிபட்டி - சேடப்பட்டி குடிநீர் திட்டங்களுக்காக வினாடிக்கு 69 கன அடி நீர் வழக்கம்போல் வெளியேறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை