| ADDED : ஜன 05, 2024 04:49 AM
கடமலைக்குண்டு : வருஷநாடு பஞ்சம் தாங்கி கண்மாயில் தூர்வாருவதற்காக அளவீடு செய்யும் பணி துவங்கியுள்ளது.இக்கண்மாய் 64 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. கண்மாயை தனி நபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்து விவசாயம் செய்து வந்தனர். கண்மாயில் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். விவசாயிகள் சிலர் 3 ஆண்டுக்கு முன் கண்மாய் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து கண்மாயில் இருந்த ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்பட்டது. தூர்வாரும் பணியில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் விவசாயிகளின் தொடர் கோரிக்கையை தொடர்ந்து கண்மாயை தூர் வாருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வருவாய் துறை மூலம் கண்மாய் அளவீடு செய்யும் பணிகள் துவங்கியது. க.மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,இளங்கோவன், ஊராட்சித் தலைவர் மணிமுத்து, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாடசாமி, விவசாய சங்க பிரதிநிதிகள் திருமுருகன், தங்கபாண்டி, சுரேஷ், வார்டு உறுப்பினர் வாஞ்சிநாதன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.