மிரட்டும் மழையில் அச்சுறுத்தலாக நடமாடும் வனவிலங்குகள்
மூணாறு: மூணாறு பகுதியில் கனமழை மிரட்டும் நிலையில் அச்சுறுத்தலாக நடமாடும் வனவிலங்குகளால் தொழிலாளர்கள் கதி கலங்கி உள்ளனர்.கேரளாவில் வழக்கத்தை விட முன்கூட்டியே மே 24ல் துவங்கிய தென்மேற்கு பருவ மழை ஆரம்பம் முதல் கொட்டித் தீர்த்து வருகிறது. மாநிலத்தில் பிற பகுதிகளை விட மூணாறில் அதிகமாக கன மழை மிரட்டி வருகிறது. அதனால் நிலச்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதால் தொழிலாளர்கள், பொதுமக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். இது ஒரு புறம் இருக்க மிரட்டும் மழையிலும் வனவிலங்குகளின் அச்சுறுத்தலால் தொழிலாளர்கள் கதி கலங்கி உள்ளனர்.மூணாறு பகுதியில் வலம் வரும் பிரபல படையப்பா ஆண் காட்டுயானை கன்னிமலை, நயமக்காடு ஆகிய பகுதிகளில் நடமாடி வருகிறது. தவிர காட்டு மாடுகளும் அதிகம் நடமாடுகின்றன. குறிப்பாக அவை நல்லதண்ணி எஸ்டேட் ஐ.டி.டி., டிவிஷனில் குடியிருப்பு பகுதியில் பகலில் அடிக்கடி நடமாடுகின்றன. நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு பலத்த மழையின் இடையே காட்டு மாடு குடியிருப்பு பகுதியில் வலம் வந்தது.வெயில் காலங்களில் வனவிலங்குகளின் நடமாட்டத்தை தொலைவில் இருந்து பார்க்க முடியும் என்பதால் எளிதில் தப்பிவிடலாம். தற்போது இருளை உணர்த்தும் வகையில் கடும் மேகமூட்டத்துடன் மழை பெய்வதால் வனவிலங்குகளின் நடமாட்டம் அருகில் சென்ற பிறகு தான் உணர முடியும். அதனால் தொழிலாளர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.