கடன் செலுத்தாததால் வீடு ஜப்தி நடவடிக்கை: பெண் தற்கொலை
தேவதானப்பட்டி:தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியில் கடன் தவணை செலுத்தாததால் வீட்டை ஜப்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வேதனையில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.எருமலைநாயக்கன்பட்டியைச் சேர்ந்த அண்ணாமலை மனைவி சந்திரா 50. முருகமலைநகரில் மட்டை கம்பெனியில் வேலை செய்தார். சில ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை இறந்தார்.இதனால் சந்திரா மகன் சந்திரபாண்டி 30, குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.சந்திரா வீட்டை விரிவுபடுத்த பெரியகுளம் 'ஈக்குவிட்டிஸ்' தனியார் வங்கியில் 2023ல் தனிநபர் கடன் ரூ.11 லட்சம் வாங்கினார். இதற்கு மாத தவணையாக ரூ.19 ஆயிரம் செலுத்தி வந்தார்.சந்திராவுக்கு உடல்நலம் சரியில்லாததால் இரு தவணைகளை செலுத்தவில்லை. இதனால் வங்கி கலெக் ஷன் ஏஜன்ட்கள் தவணைத்தொகையை இரு நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வீட்டை ஜப்தி செய்வோம் என எச்சரித்தனர்.மனவேதனையில் சந்திரா விஷம் குடித்தார். தேவதானப்பட்டி வட்டார சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். எஸ்.ஐ., முருகப்பெருமாள் விசாரித்து வருகிறார்.