| ADDED : பிப் 26, 2025 02:05 AM
திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே அங்கன்வாடி மையத்தில், சிலர் மது பாட்டில்களை உடைத்து வீசி, மலம் கழித்துச் சென்ற சம்பவத்தால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு குழந்தைகளை அனுப்பவும் மறுத்தனர்.திருநெல்வேலி மாவட்டம், சுத்தமல்லி அருகே மேலகுன்னத்துாரில், பட்டியலின மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் அங்கன்வாடி மையம் செயல்படுகிறது. இங்கு முன்பு, 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்தனர். தற்போது, 10 குழந்தைகள் படிக்கின்றனர். நேற்று காலை அங்கன்வாடி ஊழியர் பிரேமா, மையத்தை திறக்க வந்தபோது, வாசலில் மலம் கழிக்கப்பட்டிருந்ததது. மேலும், மது பாட்டில்கள் உடைக்கப்பட்டு, ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. தகவலறிந்த பெற்றோர், குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்ப மறுத்தனர்.இதையடுத்து, கழிவுகளை அகற்றி, பிளீச்சிங் பவுடர் துாவி, அந்த இடத்தை சுத்தம் செய்தனர். அதன் பிறகும், இரண்டு குழந்தைகள் மட்டுமே படிக்க வந்தனர். மற்ற, எட்டு குழந்தைகளை பெற்றோர் அனுப்ப மறுத்தனர். மாலையில் சிலர் அங்கன்வாடி வளாகத்தில் மது அருந்தி, இதுபோன்ற மோசமான செயல்களில் ஈடுபடுவது தெரியவந்தது. இதுகுறித்த புகாரை தொடர்ந்து, அந்த வளாகத்தில் மது அருந்தி, மலம் கழித்தவர்கள் குறித்து பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.