உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கணினிமய திட்டத்தில் தொடர்கிறதுகுளறுபடி டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்பல்

கணினிமய திட்டத்தில் தொடர்கிறதுகுளறுபடி டாஸ்மாக் கடை ஊழியர்கள் புலம்பல்

திருவாலங்காடு, திருவள்ளூர் மாவட்டத்தில், டாஸ்மாக் கடைகளில் கணினிமய திட்டத்தில் அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதாக ஊழியர்கள் புலம்புகின்றனர்.தமிழகத்தில் முதற்கட்டமாக திருவள்ளூர், திருச்சி நெல்லை உட்பட 15 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கணினிமய திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. ஸ்கேன் செய்து விற்பனை செய்யும் போது, அடிக்கடி தொழில்நுட்ப கோளாறு ஏற்படுவதால், குளறுபடி ஏற்படுவதாக டாஸ்மாக் ஊழியர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம், 4,830 கடைகள் வாயிலாக பீர் மற்றும் மதுபானங்களை விற்கிறது; 11 நிறுவனங்களிடம் இருந்து மது வகைகளையும், ஏழு நிறுவனங்களிடம் இருந்து, பீர் வகைகளையும் கொள்முதல் செய்கிறது.ஆலைகளில் இருந்து மதுபான வகைகள், டாஸ்மாக் கிடங்கிற்கு லாரிகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன; அங்கிருந்து, மதுக்கடைகளுக்கு அனுப்பப்படுகின்றன.கடைகளில் மது வகை இருப்பு, தேவைப்படும் மது வகை உள்ளிட்ட விபரங்களை மேற்பார்வையாளர்கள், மேலாளர்களுக்கு தெரிவிக்கின்றனர். அதற்கு ஏற்ப, மது வகைகள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.குறிப்பிட்ட நிறுவனங்களின் மது வகைகளுக்கு முன்னுரிமை அளிப்பது, அரசு நிர்ணயம் செய்திருக்கும் விலையை விட கூடுதலாக விற்பது உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து, கிடங்குகளில் இருந்து மதுபானங்களை விற்பது வரை, கணினிமயமாக்க அத்துறையின் அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவிட்டார்.அதன்படி, இதற்கான பணியை மத்திய அரசின் 'ரெயில்டெல்' என்ற நிறுவனத்திடம் டாஸ்மாக் நிர்வாகம் வழங்கியது; திட்டச்செலவு 294 கோடி ரூபாய்.இந்நிறுவனம், கணினிமய கண்காணிப்பு மென்பொருள் உருவாக்கம், அனைத்து கடைகளுக்கும் கையடக்க 'ஸ்கேனர், பிரின்டர்' கருவிகள் வழங்கி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருங்கிணைப்பு பணிகளை பராமரிக்கும் வேலையை மேற்கொண்டுள்ளது.இதன்படி, காஞ்சிபுரம் தெற்கு மற்றும் வடக்கு, திருவள்ளூர் மேற்கு, திருப்பூர், திருச்சி, சிவகங்கை, கரூர், விருதுநகர், திருநெல்வேலி, புதுக்கோட்டை உட்பட 15 மாவட்ட மதுக் கடைகளில் கணினிமய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தை தன் வசதிக்காக கிழக்கு, மேற்காக டாஸ்மாக் நிர்வாகம் பிரித்துள்ளது. சென்னையை ஒட்டிய பகுதிகளான, எண்ணுார், கும்மிடிப்பூண்டி உள்ளிட்டவை கிழக்காக பிரிக்கப்பட்டு, இங்கு 185 மதுக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. மேற்கில் திருவள்ளூர் நகரம், திருத்தணி உள்ளடக்கிய பகுதிகளில் 124 மதுக்கடைகள் உள்ளன.கடந்த பிப்ரவரி மாதம் முதல், கிழக்கில் மட்டும் விற்பனை கணினிமயமாக்கப்பட்டுள்ளது. இங்கு மதுபாட்டில்களை ஸ்கேன் செய்யும் போதும், சில நேரங்களில் நெட்வொர்க் கனெக் ஷன் கிடைக்காதது போன்ற காரணங்களால், அடிக்கடி கோளாறுகள் ஏற்படுகின்றன. இதனால், விற்பனை நேரங்களில் ஊழியர்கள் அல்லல்படுவதாக வேதனை தெரிவித்தனர்.

தரம் உயர்த்த வலியுறுத்தல்

மது பாட்டில்களை தினமும் ஸ்கேன் செய்து விற்பனை செய்ய கையடக்க வடிவில், 'பார்கோடு ரீடர்' கருவிகளும், பிரின்டர் கருவிகளும் வழங்கப்பட்டுள்ளன. கருவியில் மதுபாட்டில் மேல் உள்ள க்யூ.ஆர்., குறியீடை 'ஸ்கேன்' செய்யும் போது, சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறால் ஸ்கேன் ஆவதில்லை. இதனால் விற்பனை தாமதப்படுவதுடன், பணிகளும் பாதிக்கப்படுகின்றன.இரவில் விற்பனை முடிந்து கணக்கு முடித்து சமர்பிக்கும் போதும் கோளாறு ஏற்படுவதால், இரவு 10:00 மணிக்கு மேல் கூடுதலாக 40 நிமிடம் முதல் ஒரு மணி நேரம் வேலை செய்ய வேண்டியுள்ளது. கடந்த வாரம் தொடர்ந்து இரண்டு நாட்கள் ஏற்பட்ட கோளாறு காரணமாக, விற்பனையின் போது பல்வேறு இன்னல்களை சந்தித்தோம். ஒன்று கணினி மையத்தை தரம் உயர்த்த வேண்டும் அல்லது திட்டத்தை கைவிட வேண்டும்.-- டாஸ்மாக் ஊழியர்கள்திருவள்ளூர் மாவட்டம்.

இது அரசின் முடிவு!

ஸ்கேன் செய்து விற்பனை செய்யும் போது, கருவியில் பல நேரங்களில் கோளாறு ஏற்படுவதாக ஊழியர்கள் தொடர்ந்து வைக்கும் குற்றச்சாட்டுகளை கண்காணித்து வருகிறோம். கணினிமயமாக்கப்படுவது அரசின் முடிவு. எனவே உயரதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.டாஸ்மாக் அதிகாரிதிருவள்ளூர் மாவட்டம்.

கூடுதலாக 10 ரூபாய்

வசூல் தொடர்கிறதுகணினிமயமாக்கப்பட்ட உடன், குவார்ட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது ஒழியும் என எதிர்பார்க்கப்பட்டது. நகர்ப்புறங்களில் கொடுப்பதை, ஊழியர்கள் வாங்கிக் கொள்கின்றனராம். ஆனால், மது விற்பனை கணினிமயமாக்கப்பட்ட மாவட்டங்களில், தற்போதும் 10 ரூபாய் கூடுதலாக பெறப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஊழியர்கள் 10 ரூபாயை தனியாக கேட்டு பெறுவதாகவும், கிராமப்புற கடைகளில் கட்டாய வசூல் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை