| ADDED : மார் 29, 2024 11:46 PM
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது இலுப்பூர் ஊராட்சி. இங்கிருந்து பாப்பரம்பாக்கம் செல்லும் சாலையில் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்பாட்டிற்காக கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதன் பின் அந்த கட்டடம் ஒன்பது ஆண்டுகளுக்கு முன் 53 ஆயிரம் ரூபாய் செலவில் சீரமைக்கப்பட்டது. அதன்பின், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், கட்டடம் சேதமடைந்து கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் பயன்படுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் கட்டடத்தின் உட்புறம் முட்செடிகள் வளர்ந்து புதர் மண்டிக் கிடக்கிறது. இந்த மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது பெண்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய நிர்வாகத்தினர், மகளிர் சுகாதார வளாகத்தை சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென இப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l திருவாலங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு மாட வீதி, சன்னிதி தெரு, பராசக்தி நகர், பவானி நகர், அம்பேத்கர் நகர் என 10க்கும் மேற்பட்ட நகரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், கடைகள் திருமண மண்டபங்கள் உள்ளன. இந்நிலையில் மேற்கண்ட பகுதியில் சேகரமாகும் குப்பையை தரம் பிரிக்க, தேவையற்றதை எரியூட்ட திருவாலங்காடு பி.டி.ஓ., அலுவலகம் அருகே குப்பைகிடங்கு அமைக்கப்பட்டுள்ளது.சுற்றி ஆரம்ப சுகாதார நிலையம், வேளாண் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகம் மற்றும் குடியிருப்புகள் உள்ளது.இந்நிலையில் இங்கு சேகரமாகும்குப்பையை மூன்று மாதங்களாக அகற்றாமல் கிடங்கு முழுதும் வீசப்பட்டு குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் நோய்தொற்று பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பகுதிவாசிகள் புலம்புகின்றனர்.கிடங்கில் தேங்கியுள்ள குப்பையை அகற்றி சீரமைக்கவும், மீண்டும் குப்பைதேங்காமல் இருக்கவும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.