புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர் விபரம் சேகரிப்பு
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களின் தகவல்கள் சேகரிக்கும்படி, தமிழக அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில், ஊத்துக்கோட்டை அண்ணா நகர் பகுதியில் பாதை புறம்போக்கு பகுதியில், வசிக்கும், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் கிருஷ்ணா குடியிருப்பு பகுதியில் வசிக்கும், 20க்கும் மேற்பட்டவர்களின் குடும்ப தகவல்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.இதுகுறித்து, ஊத்துக்கோட்டை தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாஸ் கூறுகையில், ''மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி, ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் புறம்போக்கு நிலங்களில் வசிப்பவர்களின் தகவல்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தி, அரசு பிறப்பிக்கும் உத்தரவு செயல்படுத்தப்படும்,'' என்றார்.