கும்மிடியில் சாலையோர கடைகளுக்கு ஒதுக்கிய இடத்தில் கட்டுமான பணி நிறைவு
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் அமைந்துள்ள ஜி.என்.டி., சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகளை, கடந்த நவம்பர் மாதம், 16ம் தேதி, மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அகற்றினர். வாழ்வாதாரம் இழந்த, 150க்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள், நிரந்தர இடம் கேட்டு, கும்மிடிப்பூண்டி தி.மு.க., - எம்.எல்.ஏ., கோவிந்தராஜனிடம் முறையிட்டனர்.அதன்படி, கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பேருந்து நிலையம் அருகே, 40 சென்ட் பரப்பளவு இடம் ஒதுக்கப்பட்டது. ஒதுக்கிய இடத்தில், 60 லட்சம் ரூபாய் மதிப்பில் கான்கிரீட் தரை மற்றும் கூரை அமைக்கும் பணிகள் துரிதமாக மேற்கொண்டு முடிக்கப்பட்டன.அந்த இடத்தில், 6 அடிக்கு 5 அடி அளவில், 180 கடைகள், 8 அடிக்கு 6 அடி அளவில், 17 கடைகள் என, மொத்தம், 197 கடைகளுக்கான இடம் ஒதுக்கப்பட உள்ளன.ஒவ்வொரு கடைகளுக்கான இடத்தை தரையில் பெயிண்ட்டால் கோடு போட்டு பிரிக்கும் இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. விரைவில் கடைகளுக்கு இடம் ஒதுக்கப்படும் என, பேரூராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.