உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / கிடப்பில் போடப்பட்டுள்ள நெடுஞ்சாலை சீரமைப்பு பணி

கிடப்பில் போடப்பட்டுள்ள நெடுஞ்சாலை சீரமைப்பு பணி

கடம்பத்துார்:திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, கடம்பத்துார் ஒன்றியத்துக்கு உட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.இங்குள்ள போளிவாக்கம் சத்திரம் பகுதியிலிருந்து குன்னத்துார், பள்ளகாலனி, மேட்டுகாலனி, அழிஞ்சிவாக்கம் வழியாக தண்டலம் அரக்கோணம் நெடுஞ்சாலைக்கு செல்லும் சாலையை, 10க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் பயன்படுத்தி வருகின்றனர்.இச்சாலை சேதமடைந்து மிகவும் மோசமான நிலையில் இருந்தது. இதையடுத்து, கிராம சாலை மேம்பாடு திட்டத்தின் கீழ், 6.50 கோடி ரூபாய் மதிப்பீல் சீரமைக்கும் பணி, ஓராண்டுக்கு முன் துவங்கியது.இந்நிலையில், 6.50 கி.மீ., துாரமுள்ள இச்சாலையின் சீரமைப்பு பணிகள், எட்டு மாதங்களுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. இதனால், இச்சாலை வழியாக செல்லும் 10க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியர் மற்றும் பகுதிவாசிகள் நடந்து கூட செல்ல முடியாமல் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வர முடியாததால், மருத்துவ வசதிக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, கிடப்பில் போடப்பட்ட நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.l திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது சின்னம்மாபேட்டை ஊராட்சி. இங்கு 15,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.இங்கு சின்னம்மாபேட்டை -- வியாசபுரம் வரையில், 15 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட தார்ச்சாலை, 3 ஆண்டுகளாக சேதமடைந்து இருந்தது. எனவே இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நபார்டு மற்றும் கிராமசாலைகள் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ், 2.25 கி.மீ., நீளத்திற்கு, 1.50 கோடி ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கியது. தற்போது ஜல்லிக்கற்கள் கொட்டி இரண்டு மாதமாகியும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை.இதனால் கொட்டப்பட்ட ஜல்லிக்கற்கள் ஆங்காங்கே சிதறி மக்கள் இருசக்கர வாகனத்தில், நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் கிராமத்தின் முக்கியசாலையை விரைந்து அமைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை