திருத்தணியில் ஏரிகள் தடுப்பு சுவர் பணி தீவிரம்
திருத்தணி:திருத்தணி வருவாய் கோட்டத்தில், நீர்வளத்துறையினர் மொத்தம், 79 ஏரிகளை பராமரித்து வருகின்றனர். பெரும்பாலான ஏரிகளின் கடைவாசல் மற்றும் நீர்வரத்து கால்வாயின் அரிப்புகளால் சேதமடைந்துள்ளன. பருவ மழைக்கு முன்பே ஏரிகளின் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கு திருத்தணி நீர்வளத்துறையினர் தீர்மானித்து, முதற்கட்டமாக நான்கு ஏரிகள் சீரமைப்பு பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.இது குறித்து திருத்தணி நீர்வளத்துறையின் உதவி செயற்பொறியாளர் ரமேஷ் கூறியதாவது: திருத்தணி வருவாய் கோட்டத்தில் அகூர் மற்றும் மைலார்வாடா ஆகிய ஏரிகளின் கடைவாசல் கால்வாய் சேதமடைந்துள்ளது. அதே போல் கல்யாணபுரம் மற்றும் கோரமங்கலம் ஆகிய ஏரிகளின் நீர்வரத்து கால்வாய் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்துள்ளது.கடைவாசல் சீரமைக்கவும், கால்வாய் அரிப்புகளை தடுப்பதற்காக. மொத்தம், 36 லட்சம் ரூபாய் மதிப்பில் தடுப்பு சுவர் அமைக்கும் பணி தற்போது துரித வேகத்தில் நடந்து வருகிறது. இப்பணிகள் விரைவில் முடிந்து பருவ மழைக்கு முன்பு சீரமைத்து ஏரிகளுக்கு தண்ணீர் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.