சாலையில் மெகா பள்ளம் அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியம், மணவூர் ரயில் நிலையம் -- சின்னம்மாபேட்டை வரையிலான சாலை, 4 கி.மீ., துாரம் உடையது. இச்சாலை வழியாக தினமும் 10,000க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகள் திருவள்ளூர், கடம்பத்துார், அரக்கோணம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வருகின்றனர். மூன்று ஆண்டுகளாக, மணவூர் ரயில் டிக்கெட் கவுண்டரில் இருந்து தொழுதாவூர் வரையிலான 3 கி.மீ., சாலை மிகவும் சேதமடைந்து, ஜல்லிக் கற்கள் பெயர்ந்து பள்ளம் மேடாக காட்சியளிக்கிறது. சேதமடைந்த சாலையால் பல்வேறு விபத்துகளில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். தொழுதாவூர் ஓடைக்கால்வாய் அருகே, கடந்தாண்டு டிசம்பரில் சாலையில் பள்ளம் ஏற்பட்டது. இப்பள்ளம் நாளுக்கு நாள் பெரிதாகி வருவதால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.எனவே, சேதமடைந்த சாலை மற்றும் பள்ளத்தை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.