| ADDED : ஜூலை 25, 2024 12:10 AM
கும்மிடிப்பூண்டி:கவரைப்பேட்டை அடுத்த பஞ்செட்டியில், ஆனந்தவள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சுயம்பு லிங்கத்தை, அகத்திய முனிவர் பல காலமாக வழிபாடு செய்ததால், அகத்தீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது.பிரதோஷ மகிமை கொண்ட, பெருமை வாய்ந்த சிவத்தலங்களுள், பஞ்செட்டியும் ஒன்றாகும். ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இக்கோவிலில், விசேஷ நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வழிபடுகின்றனர்.கோவிலின் தல வரலாற்றில், கோவிலின் கிழக்கு பகுதியில் பரந்து விரிந்து காணப்படும் அகத்தியர் தீர்த்தத்திற்கு முக்கிய பங்கு உண்டு. அகத்திய முனிவர் அறிவுறுத்தலின்படி, குளத்தில் மூழ்கி சிவனை வழிப்படுபவர்கள், சாப விமோசனம் பெறுவதாக ஐதீகம்.அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க அகத்திய தீர்த்தக் குளம், பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் இருப்பதால், மணல் திட்டுகள் உருவாகி, அதில் புதர்கள் சூழ்ந்து, மழைநீரை தக்க வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலத்தடி நீர்மட்டமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எனவே, ஹிந்து அறநிலையத்துறையினர் குளத்தை துார்வாரி, முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.