போக்குவரத்து நெரிசலால் திணறும் திருவள்ளூர் ...தினமும்! :கிடப்பில் உள்ள புறவழிச்சாலை பணி துவக்கப்படுமா?
திருவள்ளூர்:திருவள்ளூர் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட புறவழிச்சாலை திட்ட பணிகள், ஐந்து ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளன. இதனால் தினமும் போக்குவரத்து நெரிசலில் திருவள்ளூர் நகர பகுதி சிக்கி தவிக்கிறது.சென்னை-திருப்பதி செல்லும் வழியில் அமைந்துள்ளது திருவள்ளூர். மாவட்ட தலைநகரான, திருவள்ளூரைச் சுற்றி, ஏராளமான தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள், திருவள்ளூர் நகரம் வழியாக வந்து செல்கின்றன.ஸ்ரீபெரும்புதுார், பூந்தமல்லி, செங்குன்றம், ஆவடி வழியாக வரும் அனைத்து வகை வாகனங்கள், திருவள்ளூர் ஜே.என்.சாலை வழியாக செல்வதால், இச்சாலை எப்போதும் நெரிசல் மிகுந்து காணப்படுகிறது. பெரியகுப்பத்தில் இருந்து, ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை, கலெக்டர் அலுவலகம் வரை, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், வங்கிகள், நீதிமன்றங்கள் உள்ளன.இங்கு வரும், நோயாளிகள், ஊழியர்கள், மாணவ, மாணவியர் என பலரும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றனர். இந்த நெரிசலை களைய, புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என, கடந்த,10 ஆண்டுகளாக, பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.இதையடுத்து, திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் சாலையில், மணவாள நகர் அடுத்த, மேல்நல்லாத்துாரில் இருந்து, கூவம் ஆற்றை கடந்து சேலை வழியாக, திருப்பாச்சூரை இணைக்கும் வகையில், 5.6 கி.மீட்டர் நீளத்திற்கு புறவழிச் சாலை அமைக்க திட்டம் தயாரிக்கப்பட்டது.இத்திட்டத்தில், கூவம் ஆற்றைக் கடக்கவும், ரயில் தண்டவாளத்தை கடக்கவும், இரண்டு மேம்பாலங்கள் கட்ட, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.கடந்த, 2019ம் ஆண்டு, இச்சாலை திட்டப்பணிக்கு, தமிழக அரசு அனுமதி வழங்கியது. நிலம் கையகப்படுத்தி, இழப்பீடு தொகை வழங்கவும், திட்டத்தை நிறைவேற்றவும், 86.28 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.அதன் பின், புறவழிச்சாலை பணி அமைக்கும் பணி துவங்கப்படாமல், கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், கடந்த 2 ஆண்டுக்கு முன் சட்டசபையில், நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ.வேலு, புறவழிச்சாலை திட்டப் பணியை துவக்க, திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் பணி துவங்கப்படும்,'என்றார்.ஆனால், நிலம் கையகப்படுத்தும் பணி முழுமையடையாமல் இருந்ததால் திருவள்ளூர் நகரில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, பொதுமக்கள் அவதிப்படுவதை தொடர்கதையாகி வந்தது. இதற்கு காரணம், இழப்பீட்டு தொகை வழங்கும் பணி ஆமை வேகத்தில் நடப்பது தான். இதுகுறித்து, நெடுஞ்சாலை துறையினர் கூறியதாவது:திருவள்ளூர் புறவழிச் சாலைத் திட்டப் பணிக்காக, மேல்நல்லாத்துார், பெரியகுப்பம், சேலை மற்றும் திருப்பாச்சூர் வரை, நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. பயனாளிகளுக்கு இழப்பீடு தொகை, படிப்படியாக வழங்கப்பட்டு வருகிறது. இழப்பீட்டு தொகை முழுதும் கொடுத்தால் தான், நிலம் கையகப்படுத்தி, சாலை பணி துவங்க முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.எனவே, மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர், இழப்பீட்டு தொகை வழங்கும் பணியை விரைவுபடுத்தி, புறவழிச்சாலை திட்ட பணியை துவக்கி, திருவள்ளூர் நகர நெரிசலுக்கு விடிவு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.