4 ஆண்டுகளாக முடிவுக்கு வராத மப்பேடு சமுதாயகூடம் பணிகள் ரூ.1.60 கோடி வரிப்பணம் வீண்
கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்டது மப்பேடு ஊராட்சி. இப்பகுதியில், சமுதாயக்கூடம் இல்லாததால், தனியார் மண்டபங்ளை பகுதிவாசிகள் நாடிச் செல்லும் நிலை ஏற்பட்டது.இதையடுத்து, அப்போதைய திருவள்ளூர் அ.தி.மு.க., - எம்.பி., வேணுகோபால், தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு மற்றும் அரசு, தனியார் நிறுவனம் பங்களிப்புடன், 1.60 கோடி ரூபாய் மதிப்பில், சமுதாயக்கூடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.மப்பேடு சிவன் கோவில் அருகே இடம் தேர்வு செய்யப்பட்டு, கடந்த 2019 பிப்ரவரி மாதம், வட்டார வளர்ச்சி அலுவலர்களால் பூஜை போடப்பட்டது.அதன்பின், மண் பரிசோதனை முடிவுகள் அடிப்படையில், கால்நடை மருத்துவமனை அருகே மாற்று இடம் தேர்வு செய்யப்பட்டு, 2020ல் பணிகள் துவங்கின.பணிகள் துவங்கி நான்கு ஆண்டுகளாகியும் நிறைவு பெறவில்லை. தற்போது, எவ்வித கட்டுமான பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், கட்டடம் புதர்மண்டி வீணாகி வருவதோடு, மது அருந்தும் கூடாரமாகவும் மாறி வருகிறது. இதனால், அரசு பணம் 1.60 கோடி ரூபாய் வீணாகி வருவது, பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.எனவே, சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் மப்பேடு ஊராட்சியில், சமுதாயக்கூட பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.