குப்பை கொட்ட இடமில்லாமல் 22 ஆண்டுகளாக...போராட்டம்!:இடம் தேர்வு செய்வதில் வருவாய் துறை அலட்சியம்
திருத்தணி:திருத்தணி நகராட்சியில், குப்பை சேகரித்து கொட்டுவதற்கு கிடங்கு வசதி கேட்டு 22 ஆண்டுகளாக நிர்வாகம் போராடி வருகிறது. வருவாய் துறையினர் இடவசதி ஏற்படுத்தி தருவதில் அலட்சியம் காட்டுவதால் துப்புரவு ஊழியர்கள் கடும் அவதிப்படுகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முதல்நிலை நகராட்சியில், 21 வார்டுகளில், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அரசு அலுவலகங்கள், அரசு மருத்துவமனை, பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் வணிக வளாகங்கள் என, 3500க்கும் மேற்பட்ட உள்ளன.மேலும், காய்கறி, பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்நிலையில், நகராட்சியில் தினமும் 19.60 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.இதில், 10.80 டன் மக்கும் குப்பை, 8.80 டன் மக்கா குப்பை ஆகும். இதுதவிர, துணி, பிளாஸ்டிக் கழிவுகள் என தினமும், 3 டன் சேகரிக்கப்படுகிறது. இந்த குப்பைகளை 20 நகராட்சி நிரந்தர துப்புரவு பணியாளர்கள், 101, ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள், 5 மேற்பார்வையாளர்கள் மூலம், ஒரு டிப்பர் லாரி, 2 டிராக்டர்கள் மற்றும் 23 பேட்டரி ஆட்டோக்கள் மூலம் சேகரித்து, பெரியார்நகர் பகுதியில் உள்ள பசுமை உரக்குடிலுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.அங்கு, 20 ஊழியர்கள் மூலம் குப்பைகளை தரம் பிரித்து உரம் தயாரித்தும், மக்காத குப்பைகளை தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில் கடந்த, 2002ம் ஆண்டு முதல் பேரூராட்சி, நகராட்சி என, 2017 வரை குப்பைகள் சேகரித்து கொட்டுவதற்கு போதிய கிடங்கு வசதியில்லாததால் நகராட்சி ஊழியர்கள் நந்தியாறு, அரசு போக்குவரத்து பணிமனை அருகே அரசு பள்ளி விளையாட்டு மைதானம் மற்றும் கன்னிகாபுரம் ஆகிய வனப்பகுதியில் கொட்டி வந்தனர்.இதனால், அவ்வப்போது, குப்பை லாரி, டிராக்டர்களை பொதுமக்கள் சிறைப்பிடித்து வந்தனர்.தொடர்ந்து திருத்தணி நகராட்சி இரண்டாம் நிலை மற்றும் முதல்நிலையாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில், நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, மக்கும், மக்கா குப்பைகள் என தரம் பிரித்து வாங்கினர். இந்த குப்பைகளை, கடந்த, 2017-18ம் ஆண்டு துாய்மை இந்தியா திட்டத்தின் கீழ், 45 லட்சம் ரூபாயில் பெரியார்நகரில் ஏற்படுத்திய பசுமை உரக்குடிலில் கொட்டி வருகின்றனர்.இந்த உரக்குடிலும் ஒரு ஏக்கருக்கும் குறைவாக உள்ளதால் நாளுக்கு நாள் குப்பைகள் சேமிக்க வைப்பதற்கு போதிய இடமில்லாததால் சில துப்புரவு ஊழியர்கள், திருத்தணி அருகே சாலையோரம் குப்பைகள் கொட்டி கொளுத்தி விடுகின்றனர். நகராட்சி நிர்வாகம் பலமுறை வருவாய் துறை அதிகாரிகளிடம், குப்பைகள் கொட்டுவதற்கு போதிய இடவசதி செய்து தருமாறு கடிதம் எழுதியும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால், 22 ஆண்டுகளாக திருத்தணி நகராட்சிக்கு குப்பை கிடங்கு இல்லாமல் நிர்வாகம் தவித்து வருகிறது. எனவே மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, குப்பை கிடங்கிற்கு இடவசதி செய்து தர வேண்டும் என நகராட்சி ஊழியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.இது குறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:நகராட்சியில் சேரும் குப்பைகளை பெரியார்நகரில் உள்ள பசுமை உரக்குடிலுக்கு கொண்டு வருகிறோம். அங்கேயும் போதிய இடவசதியில்லாததால் குப்பைகளை தரம் பிரிக்கவும், உரம் தயாரிப்பதற்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளன. மேலும் மக்காத குப்பைகளை வைப்பதற்கு போதிய இடமில்லாததால் திறந்தவெளியில் கொட்டப்பட்டுள்ளன. நகராட்சி குப்பைகள் கொட்டுவதற்கு, சில ஆண்டுகளுக்கு முன் திருத்தணி அடுத்த முருக்கம்பட்டு மற்றும் கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில் வருவாய் துறையினர் இடம் காண்பித்தனர். அங்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததாலும் அந்த இடம் கைவிடப்பட்டது. பிரச்னை இல்லாத இடத்தை வருவாய் துறையினர் தேர்வு செய்து தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.