முதல்வரை வரவேற்று போஸ்டர் கல்லுாரி சுற்றுச்சுவர் அலங்கோலம்
பொன்னேரி, பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம் கிராமத்தில் நடந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், கடந்த 18ம் தேதி தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். முதல்வரை வரவேற்பதற்காக தி.மு.க.,வினர், மீஞ்சூர் முதல் பொன்னேரி வரை, சாலையின் இருபுறமும் கட்சி கொடிகளை கட்டியும், சுவரொட்டிகள் ஒட்டியும் இருந்தனர்.இதில், பொன்னேரி அரசு கலைக்கல்லுாரி சுற்றுச்சுவர் முழுதும், கட்சியினர் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இது, சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்லுாரி மாணவர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:அரசு கல்லுாரியின் சுற்றுச்சுவர், வர்ணம் பூசி சுத்தமாக இருந்தது. தற்போது, சுவரொட்டிகளை ஒட்டி பாழாக்கி உள்ளனர். சுற்றுச்சுவரில் உள்ள சுவரொட்டிகளை முழுமையாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.அங்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வாசகங்கள் மற்றும் வரைபடங்கள் அமைக்க, கல்லுாரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் இதுபோன்று நடப்பதை தடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.