தேர்வாகியும் பணி வழங்காததால் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி
திருவள்ளூர்,சென்னை உயர் நீதிமன்றத்தில் நகல் பரிசோதகர் பணிக்கு தேர்வாகியும் பணி வழங்காததை கண்டித்து, திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், குடும்பத்துடன் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, சீனிவாசபுரம் முஸ்லிம் நகரைச் சேர்ந்தவர் ரசூல், 32. இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் நகல் பரிசோதகர் பணிக்கு, 2024ம் ஆண்டு தேர்வு எழுதி, நேர்முக தேர்வில் தேர்ச்சி பெற்றார். ஆனால், தற்போது வரை பணி வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட ரசூல், சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நேர்முக தேர்வுக்கு வரவில்லை' எனக் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த ரசூல், மனைவி ஜெய்னாப், 26, மற்றும் மூன்று பெண் குழந்தைகளுடன், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று வந்தார். அங்கு, திடீரென தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். பின்,போலீசார் அவரை கலெக்டரிடம் அழைத்துச் சென்றனர். அவரிடம் இருந்து மனுவை பெற்ற கலெக்டர்,“உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.