வட்டார கல்வி அலுவலகத்திற்கு விரைவில் கட்டடம்
திருத்தணி: திருத்தணி, பழைய தர்மராஜா கோவில் அருகே செயல்பட்டு வந்த திருத்தணி வட்டார கல்வி அலுவலக கட்டடம் பழுதடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது. கடந்த 2022 அக்டோபர் மாதம் வட்டார கல்வி அலுவலகம், திருத்தணி ராதாகிருஷ்ணன் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆய்வக கட்டடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. ஆய்வகத்தில், வட்டார கல்வி அலுவலகம் இயங்கி வந்ததால், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்கள் செய்முறை தேர்வு மற்றும் பயிற்சி எடுப்பதில் சிக்கல் இருந்து வந்தது. இதையடுத்து, வட்டார கல்வி அலுவலர்கள் பழுதடைந்த வட்டார கல்வி அலுவலக கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்டுவதற்கு, வருவாய் துறையினரிடம் இடத்தை அளந்து, பள்ளி கல்வித்துறை பெயரில் பட்டா மாற்றம் செய்ய வேண்டும் என, இரு ஆண்டுகளுக்கு மேலாக வருவாய் துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, சில நாட்களுக்கு முன் வருவாய் துறையினர் இடத்தை அளந்து, கல்வி துறையின் பெயரில் பட்டா வழங்கியது. இதனால், திருத்தணி வட்டார கல்வி அலுவலகத்திற்கு விரைவில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது. இதுகுறித்து, திருத்தணி வட்டார கல்வி அலுவலர் கிரிஜா கூறியதாவது: வருவாய் துறையினர் எங்கள் பெயரில் பட்டா வழங்கியதால், தற்போது கட்டடம் கட்டுவதற்கு 'பிளான்' தயாரித்து, திருத்தணி பொதுப்பணி துறையினரிடம் ஓரிரு நாளில் ஒப்படைப்போம். மேலும், புதிய கட்டடம் கட்டுவதற்கு தேவையான நிதியுதவியும், உடனே வழங்க தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.