சாலையில் திரியும் கால்நடைகள்; அச்சத்தில் வாகன ஓட்டிகள்
திருவாலங்காடு: திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை, தொழுதாவூர் கிராமத்தில் 5000க்கும் மேற்பட்ட கால்நடைகளை அப்பகுதிவாசிகள் வளர்த்து வருகின்றனர். சிலர் தங்கள் கால்நடைகளை உரிய முறையில் பராமரிக்காமல் விட்டு விடுகின்றனர். அவ்வாறு விடப்பட்ட கால்நடைகள் சாலையில் சுற்றித்திரிக்கின்றன. குறிப்பாக தொழுதாவூர் ---- சின்னம்மாபேட்டை சாலை, தக்கோலம் --- திருவாலங்காடு சாலையில் 24 மணி நேரமும் கால்நடைகள் சாலையில் உலா வருகின்றன. இதனால் இச்சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியுறுகின்றனர்.மேலும் கால்நடைகள், சாலை நடுவில் கும்பலாக அமர்ந்து கொள்வதும், திடீரென எழுந்து, சாலையின் குறுக்கே நடப்பதும், அவ்வப்போது சண்டையிட்டு சாலையில் குதித்தும் ஓடுகின்றன. இதனால் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி, விபத்திற்கு உள்ளாகின்றனர். நான்குசக்கர வாகனங்களும், ஆட்டோக்களும், அவ்வப்போது, கால்நடைகளால், விபத்திற்குள்ளாகி, அவற்றில் பயணம் செய்வோர், காயமடைந்து விடுகின்றனர். இதுபோன்ற விபத்து சம்பவங்கள், இச்சாலையில் அடிக்கடி நடப்பதால், வாகன ஓட்டிகள், அச்சத்துடனேயே, செல்கின்றனர்.எனவே, சாலையில் திரியும் கால்நடைகளை, பிடித்து, அவற்றின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்களும், வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.