உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் /  குறுகலான நான்கு முனை சந்திப்பு :சின்னம்மாபேட்டையில் நெரிசல்

 குறுகலான நான்கு முனை சந்திப்பு :சின்னம்மாபேட்டையில் நெரிசல்

திருவாலங்காடு: சின்னம்மாபேட்டை நான்குமுனை சந்திப்பில், சாலை குறுகலாக உள்ளதால், எதிரெதிரே வரும் வாகனங்களால் ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத வகையில் நெரிசல் ஏற்படுகிறது. கனகம்மாசத்திரம் --- தக்கோலம் மாநில நெடுஞ்சாலையில், திருவாலங்காடு அடுத்து அமைந்துள்ளது சின்னம்மாபேட்டை கிராமம். இங்கு, அரக்கோணம், மணவூர், தக்கோலம், திருவாலங்காடு என, நான்கு ஊர்களுக்கு செல்லும் சந்திப்பு சாலை உள்ளது. இந்த சாலைகளை ஒட்டி, 1,000த்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 150க்கும் மேற்பட்ட கடைகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மண்டபங்கள் உள்ளன. எனவே, இச்சாலை எப்போதும் பரபரப்பாகவும், போக்குவரத்து நெரிசலாகவும் காணப்படும். இந்நிலையில், நான்குமுனை சந்திப்பில், திருவாலங்காடில் இருந்து தக்கோலம் செல்லும் சாலை வளைவாக உள்ளதுடன், குறுகலாக உள்ளதால் எதிரெதிரே வரும் வாகனங்கள் கடந்து செல்வதில் சிரமம் உள்ளது. குறிப்பாக, ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் செல்லும் போதும், எதிரே கனரக வாகனங்கள் வரும் போதும், கடந்து செல்ல 10 - 15 நிமிடம் வரை ஆகிறது. ஆம்புலன்ஸ் செல்ல தாமதம் ஏற்படுவதால், உயிரிழப்பு நிகழும் அபாயம் உள்ளது. எனவே, நான்குமுனை சந்திப்பு சாலையை அகலப்படுத்த, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !