திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரிமருத்துவமனை, சென்னை - திருத்தணி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜே.என்.சாலையில் அமைந்துஉள்ளது. இங்கு, புறநோயாளிகள் பிரிவு, மகப்பேறு, இதய நோய் மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.தினமும், 3,000த்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்கின்றனர். மகப்பேறு மற்றும் உள்நோயாளிகள் என, 500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன.மேலும், திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, விபத்து, மகப்பேறு உள்ளிட்ட சிகிச்சை பெறுவோருக்காக, ஆம்புலன்ஸ் வாகனங்களும் தினமும் வந்து செல்கின்றன.இந்நிலையில், மருத்துவமனை வளாகத்தின் முன், ஜே.என்.சாலையில் 50க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், ஜே.என்.சாலையில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், அவசர சிகிச்சை பெற வரும் ஆம்புலன்ஸ் வாகனங்களும், சில நேரங்களில் நெரிசலில் சிக்கிக் கொள்கின்றன. இதனால், அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகள், ஆம்புலன்ஸ் வாகனத்தில் காத்திருக்க வேண்டி உள்ளது.எனவே, அரசு மருத்துவமனை எதிரில் உள்ள ஜே.என்.சாலையில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நோயாளிகளின் உறவினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.