| ADDED : டிச 04, 2025 05:21 AM
சென்னை: மெரினா சாலையில் தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்ற பசு, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. மெரினா, ஆறுமுகம் பிள்ளை தெருவில் மழைநீர் குளம்போல் தேங்கியிருந்தது. இந்நிலையில், அவ்வழியாக நேற்று முன்தினம் இரவு நடந்து சென்ற பசு ஒன்று, மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. அதை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மின்வாரியத்திற்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், ஆய்வு செய்ததில் மின் இணைப்பு பெட்டியில் மின்கசிவு ஏற்பட்டு பசு உயிரிழந்தது தெரிந்தது. அதைத்தொடர்ந்து, மின் இணைப்பு பெட்டியை சரி செய்தனர். மேலும், உயிரிழந்த மாட்டிற்கு யாரும் உரிமை கோர முன்வராததால் மாநகராட்சியினர் அதை அப்புறப்படுத்தினர். மழை காலத்தில் ஏற்படும் மின் கசிவை தடுக்கவும், மாடு உயிரிழந்ததை போன்று மற்றொரு உயிரிழப்பு சேதம் ஏற்படாதவாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.