ஆவடி ரயில் நிலையத்தில் தோண்டிய பள்ளத்தால் அபாயம்
ஆவடி, ஆவடி ரயில் நிலையத்தில், நான்கு நடை மேடைகள், ஆறு இருப்பு பாதைகள் உள்ளன. ஆவடி மார்க்கமாக தினமும் 285 மின்சார ரயில்கள் மற்றும் 5 விரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்தை தினமும் லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது 'எஸ்கலேட்டர்' அமைக்கும் பணி மற்றும் 'சிசிடிவி' க்காக கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, இரண்டாவது நடைமேடையில் 5 இன்ச் ஆழத்திற்கு சிறிய பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. அந்த பள்ளத்தில் பயணியர் இடறி விழுந்து விபத்தில் சிக்குகின்றனர். நேற்று முன்தினம், மூன்று மாத கை குழந்தையுடன் நடந்து சென்ற பெண் இடறி விழுந்துள்ளார். இதில், குழந்தைக்கு தலையில் காயம் ஏற்பட்டது.எனவே, சம்பந்தப்பட்ட ரயில்வே நிர்வாகம் கேபிள் பதிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும், என, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.