கூவம் ஆற்று தரைப்பாலத்தில் தடுப்பை மீறி ஆபத்தான பயணம்
திருவள்ளூர்:திருவள்ளூர் - மணவாளநகர் இடையே, கூவம் ஆற்றை கடக்கும் வகையில், 70 ஆண்டுக்கு முன் தரைப்பாலம் கட்டப்பட்டது. இதன் வாயிலாக, திருவள்ளூர் - பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் இடையேயான வாகன போக்குவரத்து நடைபெற்று வந்தது. கூவம் ஆற்றின் கரையோரம் உள்ள வரதராஜபுரம் அருகே அமைந்துள்ள சென்னை - அரக்கோணம் ரயில் கடவுப்பாதையில் அடிக்கடி ரயில்கள் செல்லும் போது சாலை மூடப்படும். இதனால், திருவள்ளூர் - பூந்தமல்லி, ஸ்ரீபெரும்புதுார் சாலையில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, தரைப்பாலம் அருகிலேயே, மணவாளநகர் - பெரியகுப்பத்தை இணைக்கும் வகையில், புதிதாக மேம்பாலம் கட்டப்பட்டது. அதனால், பழைய தரைப்பாலத்தை வரதராஜபுரம் பகுதி மக்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர். இந்தப் பாலமும், 2015ம் ஆண்டு கூவம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது. இதையடுத்து, வரதராஜபுரம் மக்கள், ரயில் நிலையம் சென்று, ரயில் பயணியர் பயன்படுத்தி வரும் மற்றொரு தரைப்பாலம் வழியாக மணவாளநகர் வந்து, பின் திருவள்ளூர் செல்கின்றனர். சில வாகன ஓட்டிகள், உடைந்த தரைப்பாலம் வழியாக சென்று வந்தனர். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், கடந்த ஜூனில், வரதராஜபுரம் அருகில் உடைந்த தரைப்பாலத்தை ஆய்வு செய்தார். அப்போது, உடைந்த தரைப்பாலத்தை இடித்து புதிய பாலம் கட்டவும், அதுவரை பாலத்தை அடைக்கவும் உத்தரவிட்டார். இதையடுத்து நீர்வளத்துறையினர், தரைப்பாலத்தின் இருபுறமும் தடுப்பு ஏற்படுத்தினர். சீரமைப்பு பணி துவங்காத நிலையில், அடைக்கப்பட்ட தடுப்பை மீறி வாகன ஓட்டிகள் சிலர், சேதமடைந்த பாலத்தில் பயணித்து வருகின்றனர். எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன், நீர்வளத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.