பஸ்ஸில் பயணி தவற விட்ட போனை ஒப்படைத்த ஓட்டுனர், நடத்துனர்
ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அரசு பேருந்து பணிமனையில் பணியாற்றி வருபவர்கள் ஓட்டுனர் நித்யபிரகாஷ், நடத்துனர் ரமேஷ். நேற்று முன்தினம், ஊத்துக்கோட்டையில் இருந்து, காலை, 11:00 மணிக்கு தடம் எண்.103என். கிளம்பி, 12:45 மணிக்கு மாதவரம் சென்றது. இந்த பேருந்தில் பயணம் செய்த பயணி ஒருவர், புதிதாக வாங்கிய மொபைல் போனை மாதவரத்தில் பேருந்துலேயே விட்டு விட்டு சென்றார்.இதைப் பார்த்த ஓட்டுனர், நடத்துனர் ஆகியோர் மொபைல் போனை எடுத்துக் கொண்டு ஓய்வறைக்கு சென்றனர். இதனிடையே, போனை தொலைத்த பயணி, இதுகுறித்து மாதவரம் போலீசில் புகார் செய்தார். பயணியுடன் போலீஸ் ஒருவர் பேருந்து நின்று கொண்டு இருந்த இடத்திற்கு சென்றார்.இதைப் பார்த்த ஓட்டுனர், நடத்துனர் பயணியை அழைத்தனர். பின்னர் போலீசார் முன்னிலையில் மொபைல் போனை அவரிடம் ஒப்படைத்தனர். புதிய மொபைல்போனை பெற்றுக் கொண்ட பயணி மகிழ்ச்சியுடன் சென்றார்.