துார்வாரததால் பழவேற்காடு ஏரி கடும்... வறட்சி: வாழ்வாதாரமின்றி 80 மீனவ கிராமங்கள் தவிப்பு
பழவேற்காடு:பழவேற்காடு ஏரியில் மணல் திட்டுக்கள் அதிகரித்தும் ஆங்காங்கே வறண்டும் கிடப்பதால், அதை நம்பி மீன்பிடி தொழிலில் உள்ள, 80 மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதித்து உள்ளது. மத்திய, மாநில அரசுகள் உரிய ஆய்வு மேற்கொண்டு ஏரியை ஆழப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.பழவேற்காடு ஏரியானது தமிழக - ஆந்திர மாநிலங்களின் எல்லையில், 60 கி.மீ நீளம், 17.5 கி.மீ., அகலம் கொண்டாக பரந்து விரிந்து கிடக்கிறது.பழவேற்காடு ஏரிக்கு, ஸ்வர்ணமுகி, காலங்கி, ஆரணி மற்றும் பக்கிம்ஹாம் கால்வாய் வாயிலாக நன்னீரும், வங்காள விரிகுடா கடலின் உப்பு நீரும் முகத்துவாரம் வழியாக வந்து சேர்கிறது.கடல் நீரும், ஆறுகள் மூலம் வரும் மழைநீரும் சேர்ந்து உவர்ப்பு நீராக மாறுகிறது. இந்த உவர்ப்பு நீரில் மீன்கள் அதிகளவில் இனப்பெருக்கம் செய்கின்றன.இது ஒடிசா மாநிலத்தில் உள்ள 'சில்கா' ஏரிக்கு அடுத்து, நாட்டிலேயே, நாட்டின் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரியாக விளங்குகிறது.மீன், இறால், நண்டு, நத்தை, மெல்லுடலிகள் என பல்வேறு உயிரினங்களும் இதில் உள்ளன. ஆண்டுக்கு, 40,000க்கும் அதிகமான வெளிநாட்கள் பறவைகள் வந்து செல்லும் பறவைகள் சரணலாயகமாவும் இது திகழ்கிறது.இந்த ஏரி, தமிழகத்தில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் உள்ள ஆரம்பாக்கத்தில் துவங்கி, பொன்னேரி வட்டத்தில் உள்ள பழவேற்காடு வரை, 80 மீனவ கிராமங்களை சேர்ந்த, 40 ஆயிரம் மீனவர்களின் வாழ்வாதாரமாக இருக்கிறது.இந்நிலையில் ஏரியில் ஆங்காங்கே மணல் திட்டுக்கள் அதிகரித்தும், வறண்டும் வருகிறது. ஆறுகளின் வழியாக ஏரிக்கு வரும் தண்ணீர், முழுமையாக தேங்குவதில்லை. அவை முகத்துவாரம் வழியாக கடலுக்கு சென்று விடுகிறது.இதனால் அண்ணாமலைச்சேரி, மாங்கோடு, அவுரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை ஒட்டியுள்ள ஏரிப்பகுதிகள் வறண்டு கிடக்கின்றன.தண்ணீர் இருக்கும் இடங்களிலும், ஏரியின் ஆழம், 15 ல், 3 மீட்டராக குறைந்து உள்ளது. படகுகள் மணல் திட்டுக்களில் சிக்கி தவிக்கின்றன.ஏரியில் நீர் இருப்பு குறைந்து ஆங்காங்கே வறண்டு வருவதால், மீன்வளமும் குறைந்து, மீனவர்களின் மீன்பிடி தொழில் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.மீனவர்கள் வாழ்வாதாரம் பாதித்து வருவதை தொடர்ந்து, அன்றாட வருவாய்க்காக தினக்கூலிகளாக வெளியிடங்களுக்கு சென்று வருகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும், ஆறுகள் வாயிலாக நல்ல நீர்வரத்து உள்ளது. ஏரி துார்வாரப்படாமல், அதன் ஆழம் குறைந்து உள்ளதால், மழைநீர் தேங்காமல் கடலில் சென்று கலந்து விடுகிறது.இந்த ஏரியானது, ஆங்கிலேயர் காலத்தில், டிரஜ்ஜர் இயந்திரத்தின் உதவியுடன் மணல் திட்டுக்கள் துார்வாரப்பட்டதாகவும், சுதந்திரத்திற்கு பின், துார்வாரும் பணிகள் மேற்கொள்ளபடவில்லை எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.ஒடிசா மாநிலத்தில் உள்ள, 'சில்கா' உவர்ப்பு நீர் ஏரியை மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் துார்வாரி பராமரிக்கின்றன. அதுபோன்று தமிழக அரசும் உரிய நிதி ஒதுக்கீடு செய்து, ஏரியை துார்வாரி பராமரிக்க வேண்டும் என மீனவர்கள் எதிர்பார்க்கின்றனர்.முகத்துவாரத்தை துார்வாருவது வீண்
தற்போது, 26.85 கோடி ரூபாயில் நிரந்தர முகத்துவாரம் அமைப்பதற்கான பணி நடைபெறுகிறது. ஏரியை ஆழப்படுத்தாமல் முகத்துவாரம் அமைப்பதால் பயனில்லை. ஏரியை ஆழப்படுத்துவதால் முகத்துவாரம் அடைபடாது. மீன்வளம் அதிகரிக்கும். பறவைகளின் வாழ்விடங்கள் பாதுகாக்கப்படும். மீனவர்கள், சிறுவியாபாரிகள், ஏற்றுமதியாளர்கள் என பல்வேறு தரபப்பினர் பழவேற்காடு ஏரியை நம்பி உள்ளதால் அவர்களது வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும்.- டி.நித்தியானந்தம்மீனவர், பழவேற்காடு.